சர்வதேச ஓசோன் தினம்
அண்டார்டிகா பனிக் கண்டத்தில் ஓசோன் அளவு பருவநிலைக்கேற்ப சிறிய அளவிலான மாறுதலுடன் சராசரியாக நிலவுகிறது. ஆனால் வசந்த காலத்தில் (ஆகஸ்ட், நவம்பர்) ஓசோன் அளவு சராசரி அளவில் 50 முதல் 60 வீதம் வரை குறைந்து காணப்படுகின்றது. இந்த ஓசோன் குறைவே 'ஓசோன் துவாரம்" (Ozone hole) என்று அழைக்கப்படுகிறது. பிரித்தானிய விஞ்ஞானி ஜே. போர்மன் தலைமையிலான ஆய்வுக் குழு அண்டார்டிகாவின் 'ஹாலேபே" என்ற நிலையத்தில் 1970ம் வருட மத்தியில் ஓசோன் அளவு குறைந்து காணப்பட்டதை முதன் முதலாகக் கண்டறிந்தது.
துருவப் பிரதேசத்தில் ஓசோன் அடர்த்தி குறைவதற்கு காரணமாக விளங்குவது துருவப் படை மேகங்களாகும். இந்த மேகங்கள் மீது நிகழும் பல்வேறு வகையான இரசாயனச் செயல்பாடுகளின் போது குளோரின் வெளிப்படுகின்றது. இந்த குளோரின் அணு ஓசோனுடன் தாக்கம் புரிந்து குளோரின் ஒட்சைட்டை வெளிப்படுத்துவதால் ஓசோன் செறிவு குறைகிறது.
அண்டார்டிக் பகுதி ஒசோன் படுகையில் உள்ள ஓட்டை கடந்த 2007 இல் இருந்ததை விட இந்த ஆண்டு பெரிதாகியுள்ளதாக உலக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் 2006 இல் இருந்ததை விட ஓசோன் துவாரத்தின் அளவு குறைவாக உள்ளதாக அந்த மையம் குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து உலக வானிலை ஆய்வு மையம் 2008ம் ஆண்டில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்டார்டிக் பகுதியில் உள்ள ஓசோன் படுகையில் 27 மில்லியன் சதுர கி.மீ. அளவு துவாரம் உள்ளது. இது கடந்த 2007ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 25 மில்லியன் சதுர கி.மீ. ஆகவும் 2000ம் ஆண்டில் 28.3 மில்லியன் சதுர கி. மீ. ஆகவும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓசோன் படையினை கண்டுபிடித்த காலத்தில் இருந்து விஞ்ஞானிகள் அதன் இயற்கை அமைப்பு மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 1974ல் ரசாயனவியலாளர்கள் சேர்வூட் ரொலன்ட் மற்றும் மரியா மொலினா என்போர் மனித செயற்பாடுகளின் மூலம் வளிமண்டலத்திற்கு வெளியிடப்படும் பொருட்களினால் ஓசோன் படைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கண்டுபிடித்தனர். இதனால் பல்வேறுபட்ட எதிர்விளைவுகள் ஏற்படுவதுடன் அதனை தடுப்பதற்கான சட்டதிட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளை ஓசோன் படை தேய்விற்கு காரணமான பொருட்களை வெளியிடாமல் இருப்பதற்கான பொறுப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய கடமை மக்களையே சார்ந்துள்ளது. 1995ம் ஆண்டு ஓசோன் ஆய்விற்காக குரூட்சன் மற்றும் நிகோலஸ் ஆகிய இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த அறிஞர்களின் விருப்பமெல்லாம் 'இந்த பூவுலகை காக்கும் ஓசோன் படலத்தை காக்க உலகத்திலுள்ள அனைவரும் ஒன்றாக கைகோர்க்கவேண்டும்" என்பதுதான்.
ஓசோன் துவாரத்திற்குக் காரணம் ஓசோனை தேய்வடைய செய்யக்கூடிய பொருட்களை வெளியிடுதலே (Ozone Depleting Substances) எனக் கூறப்படுகிறது. இப்பொருட்கள் பிரதானமாக மனித உருவாக்கங்களாகவே உள்ளதுடன் இதற்கு காரணமாக குறிப்பிட்டு காட்டக்கூடிய இயற்கை மூலகங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இவ் ஊறுவிளைவிக்கும் பொருட்கள் கைத்தொழில் விவசாய நடவடிக்கைகள் மூலம் உருவாக்கப்படுகின்றது. குறிப்பாக குளோரோ புளோரோ காபன் (CFC, Chloro Floro Carban), கார்பன் நாற்குளோரைட் (Carban Thetrachlorite), ஐதரோ குளோரோ புளோரோ கார்பன் (HCFC) மற்றும் மெதைல் புரோமைட் (Methil Bromite) போன்றவை பிரதானமாக ஓசோன் தேய்விற்கு காரணமாக அமைகின்றன.
இவ்வூறு விளைவிக்கும் பதார்த்தங்கள் மேல் வளிமண்டலத்தினை அண்மித்தவுடன் அவற்றின் அணுக்களினை பகுதி பகுதியாக பிரித்துவிடுகின்றது. அப்பதார்த்தங்களை உருவாக்கியுள்ள அணுக்கள் அனைத்தும் விடுவிக்கப்படுகின்றன. உதாரணமாக குளோரீன் மற்றும் புரோமின் அணுக்களை குறிப்பிடலாம். இவ்வாறு விடுவிக்கப்பட்ட அணுக்கள் தமக்கு சேதம் விளைவிக்காது பிற பொருட்களை சேதமடைய செய்யும் செயற்பாட்டினூடாக ஓசோன் படை தேய்வினை துரிதப்படுத்துகிறது. ஒவ்வொரு அணுவும் வளிமண்டலத்தில் இருந்து அகற்றப்படுவதற்கு முன்பதாக ஆயிரக்கணக்கான ஓசோன் மூலகங்களை அழிக்கக்கூடிய திறன்வாய்ந்தனவாக காணப்படும்.
ஓசோன் படைத் தேய்வினால் மனித சுகாதாரம் மற்றும் சூழல் மீது பாரிய தாக்கங்கள் ஏற்படுகின்றன. புற ஊதாக்கதிர்வீசலின் UV அளவு அதிகரிப்பதினால் மனித சுகாதாரம் மற்றும் சூழலுக்கு தீங்கு தரும் விளைவுகளை ஏற்படுத்துகின்றது. பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கான சூழலின் சம நிலையிலும் பாதிப்பு ஏற்படுகின்றது. பூமியின் சராசரி வெப்பநிலை உயரும் போது பனிப்பிரதேசங்களில் மிகவும் அதிகமான பனி உருகி கடல் மட்டம் உயர்கிறது. கடல்மட்ட உயர்வின் விளைவால் கடலருகே உள்ள பூமியின் பெரும்பான்மையான நிலப்பகுதி நீரால் சூழப்பெற்று உயிரினங்கள் வாழும் நிலப்பகுதி வெகுவாக குறைந்து விடும் அபாயம் பூதாகாரமானதாக தெரிகிறது.
ஆய்வுகளின்படி UV கதிர்வீசலுக்கும் தோல் புற்றுநோய்க்கும் இடையில் திடமானதொரு உறவு நிகழ்வதாக கூறப்படுகின்றது. உலக சுகாதாரக் கழகத்தின் கண்டுபிடிப்புகளின் படி ஒவ்வொரு ஆண்டும் 20 முதல் 30 லட்சம் பேர் தோல் புற்று நோய்க்கு ஆளாவதாகவும், இதில் 20 சதவீதத்தினர் புற ஊதாக் கதிர்களின் பாதிப்புகளால் விளைந்தவையே என்றும் தெரிவித்துள்ளது. UV கதிர்வீசலினால் கண் நோய்கள் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறானது உயர்ந்த அளவில் காணப்படுகின்றது.
UV தரை மேற்பரப்பை அடைவதுடன் அதனை உட்சுவாசிக்கும் போது நச்சுவாக மாறி சுவாசத்தொகுதி பிரச்சினைகளையும் உருவாக்குகின்றது. உயர் புறஊதாக்கதிர் மட்டமானது சில உயிர் வாழ் நுண்ணுயிர்களின் வாழ்வை பாதிக்கின்றது. உதாரணமாக Cyanobacteria நுண்ணுயிர்களானது பல தாவரங்களின் நைதரசன் நிலைநாட்டுகை செயற்பாட்டில் பிரதான பங்கினை வகிக்கின்றன. தாவரங்கள் UV கதிர்வீசலுக்கு இலகுவில் பாதிப்படைகின்றன.