ஒலிம்பிக் சுடர் ஓட்ட கெடுபிடியால் பலியான தமிழக அதிகாரி
டெல்லி: டெல்லியில் ஒலிம்பிக் ஜோதி ஓட்ட பாதுகாப்பு கெடுபிடியினால், மாரடைப்பு ஏற்பட்ட அரசு அதிகாரி ஒருவர் உடனடி சிகிச்சை பெறமுடியாமல் பலியானதாக சமாஜ்வாதி எம்.பி. ஜெயாபச்சன் குற்றம் சாட்டியுள்ளார்.
ராஜ்யசபாவில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்த எம்.பி. ஜெயாபச்சன் கூறியதாவது:
டெல்லியில் சமீபத்தில் ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் நடந்தது. அன்றைய தினத்தில் சென்னையை சேர்ந்த தேசிய தகவல் மைய உயர் அதிகாரி டெல்லி வந்திருந்தார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால், வழியில் ஆங்காங்கே போக்குவரத்து மாற்றங்கள் காரணமாக அவரது ஆம்புலன்ஸ் மாற்றுவழியில் திருப்பிவிடப்பட்டது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை வழியாக ஆம்புலன்ஸ் செல்வதற்கு சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் அந்த அதிகாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஒலிம்பிக் ஜோதி பாதுகாப்பாக சென்றடைய வேண்டும் என்று விதிக்கப்பட்ட பாதுகாப்பு கெடுபிடிகளினால் அநியாயமாக ஓர் உயிர் பிரிந்துள்ளது கண்டிக்கத்தக்கது.
விமான நிலையத்திலேயோ அல்லது உரிய நேரத்திலோ அந்த அதிகாரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் அரிதான அவரது உயிர் காப்பாற்றப்பட்டிருக்கக்கூடும்.
இதுபோன்ற அவசரகால நிலைகளில் உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கு வேண்டிய வசதிகளை நகர்ப்புற வளர்ச்சித் துறையினரும், விமானப் போக்குவரத்துத் துறையினரும் செய்ய வேண்டியது அவசியம்.
ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் போன்ற நிகழ்ச்சிகளையெல்லாம் ஒரு ஸ்டேடியத்தில் வைத்துக் கொண்டால் நல்லது என்றார் ஜெயாபச்சன்.