இன்போசிஸ் நிறுவன வேலைக்கு அரசியல்வாதிகள் சிபாரிசு
மும்பை: உலகின் முன்னணி ஐ.டி. நிறுவனங்களில் ஒன்றான இந்தியாவைச் சேர்ந்த இன்போசிசில் வேலைக்கு சேர்ப்பதற்கு அரசியல்வாதிகள் பலர் சிபாரிசு செய்துள்ளனர். ஆனால் தகுதி அடிப்படையில் மட்டுமே ஊழியர்களை தேர்ந்தெடுப்பதாக அந்நிறுவனம் தெரிவி்த்துள்ளது.
ஐ.டி.நிறுவனங்களில் முன்னணியில் இருக்கும் இன்போசிசுக்கு பெங்களூர், சென்னை, புனே, ஹைதராபாத் நகரங்களில் அலுவலகங்கள் உள்ளன. அவற்றில் வேலைக்குச் சேர விரும்பும் பலரை அரசியல்வாதிகள் சிபாரிசு செய்வதாக தகவல்கள் வெளியாகின.
இதுபற்றி இன்போசிஸ் வாரிய உறுப்பினர் மோகன்தாஸ் பாய் கூறுகையில், எங்கள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துக் கொள்ளுமாறு பலரை அரசியல்வாதிகள் சிபாரிசு செய்துள்ளனர். இருப்பினும், தகுதி,தேர்வில் வெற்றி அடிப்படையில் மட்டுமே ஊழியர்களை நியமித்துவருகிறோம் என்றார்.
மேலும், அவர், பலர் நினைப்பதற்கு மாறாக அரசியல்வாதிகள் நல்லவர்கள். அவர்களை தவறாக நினைக்கத் தேவையில்லை. மற்றவர்களைப் போலவே கட்சி பேதமின்றி அவர்களும் வேலைக்கு பலரை சிபாரிசு செய்கின்றனர்.
யார் சிபாரிசு செய்தாலும் நியமன நடைமுறை ஒரேமாதிரியாகத்தான் பின்பற்றப்படுகிறது. தகுதி, தேர்வில் வெற்றிதான் பிரதானம்.
பெங்களூர், புனே அலுவலகங்களில் 45 முதல் 50 சதவீதம் வரை உள்ளூர் ஊழியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த நிதியாண்டில் 25,000 பேருக்கு வேலை அளிக்கப்படும்.
அமெரிக்க நிதிச்சந்தையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், பின்னடைவு ஏற்பட்டாலும் இன்போசிஸ் ஆள்சேர்ப்பு தொடரும். மார்ச் 31, 2008 நிலவரப்படி ஊழியர் எண்ணிக்கை 91,187 ஆக உள்ளது. விரைவில் இது ஒரு லட்சத்தைத் தொடும் என்றார்.