பி.எச்.பாண்டியன் Vs எம்எல்ஏ: 'வாடா போடா' வாக்குவாதம்
சேரன்மகாதேவி: அரசு விழாவில் கலெக்டர் முன்னிலையில் அதிமுகவைச் சேர்ந்த பி.எச் பாண்டியனும் காங்கிரஸ் எம்எல்ஏ வேல்துரையும் வாடா.. போடா என தடித்த வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர்.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கோவிந்தபேரியில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்திற்கு உட்பட்ட மனோ கல்லூரி உள்ளது.
இந்த கல்லூரியின் புதிய வகுப்பறைகள் துவக்க விழா நடந்தது. இதில் மாஜி சபாநாயகரும், முன்னாள் அதிமுக எம்.பியுமான பி.ஹெச். பாண்டியன், அவரது மனைவியும், பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான சிந்தியா, தற்போதைய துணை வேந்தர் சபாபதி மோகன், சேரன்மாதேவி காங்கிரஸ் எம்எல்ஏ வேல்துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பாண்டியன் பேசுகையில், பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் ஹாக்கி உள் விளையாட்டு அரங்கம் அமைக்க எனது சொந்த நிதியில் இருந்து ரூ. 50 லட்சமும், மத்திய அரசிடம் இருந்து ரூ.2 கோடியும் வாங்கி கொடுத்தேன்.
ஆனால் தி்றப்பு விழா அழைப்பிதழ், கல்வெட்டிலும் எனது பெயர் புறக்கணிக்கப்பட்டது. இது குறித்து லோக்சபா சபாநாயகருக்கு கடிதம் எழுதினேன். அதன் பின்பே எனது பெயர் கல்வெட்டில் குறிப்பிட்டனர் என்றார்.
இதைத் தொடர்ந்து சேரன்மகாதேவி காங்கிரஸ் எம்.எல்.ஏ வேல்துரை பேசுகையில்,
நான் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தும் கூட முன்பு இங்கு நடந்த கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவிற்கு கூட என்னை அழைக்கவில்லை.
என்னை வேண்டும் என்றே புறக்கணித்தனர். புதிய சபாநாயகர் சபாபதி மோகன் வந்த பின்னர் தான் ஜனநாயகம் செழித்துள்ளது. கட்சி பாகுபாடு இன்றி அனைவரையும் துணைவேந்தர் அழைத்துள்ளார். பல்கலைகழகத்தில் தற்போதுதான் ஜனாநாயகம் துளிர்விட்டுள்ளது என்று பேசிக் கொண்டிருந்தார்.
(இதன் மூலம் முன்னாள் துணை வேந்தரான பாண்டியன் மனைவி சிந்தியா பாண்டியனை மறைமுகமாகத் தாக்கினார்)
அப்போது குறுக்கிட்ட பாண்டியன், பொது மேடையில் அரசியல் பேசாதே என்று சத்தம் போட்டார். இதனால் டென்சனான வேல்துரை, பாண்டியனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய பி.எச். பாண்டியன், பொதுவாக பல்கலை விழாக்களுக்கு எம்.எல்.ஏ, எம்.பிக்கள் வர வேண்டிய அவசியம் இல்லை. அதுவும் உன்னை போல மணல் கொள்ளையர்களை எப்படி அழைக்க முடியும், அதற்கு நீ ஆசைபடவும் கூடாது என்றார்.
ஆத்திரமடைந்த வேல்துரை மணல் கொள்ளை உங்கள் ஆட்சியி்ல்தான் தொடங்கியது.. மணல் கொள்ளையை பற்றி நீ பேசக் கூடாது என்றார்.
இதைத் தொடர்ந்து பாண்டியனும், எம்.எல்.ஏ வேல்துரையும் நடப்பது கல்லூரி விழா என்பதையும் மறந்து நேருக்கு நேர் தடித்த வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர்.
சிறிது நேரத்தில் இருவரும் வாடா போடா என்று பேசிக் கொண்டனர். கைலகப்பு கூட ஏற்படும் சூழ்நிலை உருவானது.
இத்தனையும் கலெக்டர் மற்றும் மாணவ-மாணவிகள் முன்னிலையில் நடந்தது.
கலெக்டர் தலையிட்டு இருவரையும் சமாதானபடுத்தினார். இதனால் விழாவுக்கு வந்தவர்கள் ஒரு வழியாக 'அடிதடி' அபாயத்தில் இருந்து தப்பினர்.