தோல்விக்கு காரணம் வருண், மோடி-சரத் யாதவ்
டெல்லி: வருண் காந்தி மற்றும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தான் பாஜக கூட்டணியின் தோல்விக்கு காரணம் என பாஜகவின் முக்கிய தோழமை கட்சியான ஐக்கிய ஜனதா தளம் குற்றம் சாட்டியுள்ளது.
அக் கட்சியின் தலைவர் சரத் யாதவ் நிருபர்களிடம் கூறுகையில்,
வருண் காந்தியின் மோசமான பேச்சு, நரேந்திர மோடி அடுத்த பிரதமர் போன்ற பிரச்சாரம் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வெற்றி வாய்ப்பை குறைத்துவிட்டது.
இதனால் தான் பாஜகவால் உத்தரப் பிரதேசத்தில் பெரிய அளவில் வெல்ல முடியாமல் போய்விட்டது என்றார்.
இந்நிலையில் தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆராய அத்வானியின் இல்லத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய மூத்த தலைவர்கள், வருண் காந்தியின் மோசமான பேச்சு, மங்களூர் பப் விவகாரம், ராஜஸ்தானில் ஏற்பட்ட உட்கட்சி பூசல், மத்திய பிரதேசத்தில் கட்சியினரின் மந்தமான செயல்பாடு ஆகியவையே கட்சியின் வெற்றி வாய்ப்பை வெகுவாக பாதி்ததுவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்தது குஜராத்துக்கு வெளியே எல்லா மாநிலங்களிலும் கட்சியின் வெற்றியை குறைத்துவிட்டது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
சில மூத்த பாஜக தலைவர்கள் கூறுகையி்ல், பிரதமராக சீக்கியர் இருப்பதால் பஞ்சாப், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றதாகக் கூறியுள்ளனர்.
வாஜ்பாய் இல்லாததும் காரணம்...ஜேட்லி:
இந்நிலையில் பாஜகவின் மூத்த தலைவர் அருண் ஜேட்லி கூறுகையி்ல், பாஜக மதசார்பற்ற கட்சி என்ற தோற்றத்தை உருவாக்கிய வாஜ்பாய் இல்லாதது கட்சியின் தோல்விக்கு முக்கிய காரணம் என்றார்.
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்டணி நல்ல வெற்றி பெற்றுள்ளது. மூன்றாவது அணிக்கு எதிரான வாக்குகள் அப்படியே காங்கிரசுக்கு கிடைத்துவிட்டன என்றார்.