கால்நடை மருத்துவ மாணவர் போராட்டம் வாபஸ்
சென்னை: அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து காலநடை மருத்துவப் பயிற்சி மாணவர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
கால்நடை மருத்துவ மாணவர்களுக்கு 6 மாத பயிற்சி காலத்திற்கு ரூ.1,250 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதை ரூ.7,500 ஆக உயர்த்த வேண்டும், பட்டமேற்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.8,000 உதவித் தொகை வழங்க வேண்டும் என்று கோரி கடந்த 13ம் தேதி முதல் சென்னை, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடந்து வந்த இந்தப் போராட்டத்தையடுத்து நேற்று கல்லூரி, மாணவர் விடுதி ஆகியற்றை அரசு காலவரையின்றி மூடுவதாக அறிவித்தது.
இதனால் சில மாணவர்கள் ஊர்களுக்குப் புறப்பட்டாலும் 100 மாணவிகள் உள்பட 250 பேர் விடுதி வளாகத்திற்குள்ளேயே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.
இதைத் தொடர்ந்து, விடுதி முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டர். கால்நடை மருத்துவ கல்லூரி டீன் லலிதா ஜான் மாணவர்களிடம் பேச்சு நடத்தியபோதிலும் போராட்டத்தை கைவிட மறுத்து விட்டனர்.
இந் நிலையில், கால்நடைத் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியை மாணவர்கள் சங்க பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மாணவர் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. எனினும் இன்று கல்லூரி திறக்கப்படவில்லை. திறக்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.