பாமகவில் இருந்தால் தொண்டர்கள் உருப்பட முடியாது - மு.க.ஸ்டாலின்
திருச்செங்கோடு: கொள்கையே இல்லாமல் நடந்து கொள்ளும் பாமகவில் இருந்தால் உருப்பட முடியாது என்ற எண்ணம் அக்கட்சியினருக்கு வந்து விட்டது என்று கூறியுள்ளார் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பெரியபாவடி செங்குந்தர் திருமண மண்டபத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள், அவற்றில் இருந்து விலகி தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது.
அப்போது மு.க.ஸ்டாலின் பேசுகையில்,
அதிமுக, பாமக, தேமுதிக கட்சிகளில் இருந்து விலகி 4 ஆயிரம் பேர் திமுகவில் இணைந்துள்ளனர். இவர்கள் திமுகவில் சேர்ந்ததற்கு தமிழகத்தில் நடக்கும் திமுக நல்லாட்சியே காரணம்.
அதிமுக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகளிடம் கொள்கை, குறிக்கோள், லட்சியம் எதுவும் இல்லை. அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக பாமகவினர் இன்று அறிவித்துள்ளனர். பாமகவுக்கு இந்த திடீர் ஞானோதயம் ஏன் ஏற்பட்டது?
கடந்த 2006ம் ஆண்டு தேர்தலின் போது, அதிமுகவை சேர்ந்த சி.வி.சண்முகம் வீட்டில் பாமகவினர் கொலை வெறி தாக்குதல் நடத்தினர். அவ்வழக்கில் ராமதாசையும், அவரது மகன் அன்புமணியையும் சேர்க்க வேண்டுமென அந்த அதிமுக பிரமுகர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு, கோடநாட்டில் ஜெயலலிதாவை ஜி.கே.மணி சந்தித்து, அந்த வழக்கில் அவர்களை சேர்க்கக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், ஜெயலலிதாவோ அதை நிராகரித்து, ராமதாசை பழிவாங்க இதை ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி, அவர்கள் பெயர்களை வழக்கில் சேர்க்கக் கூறியுள்ளார்.
இந்த காரணத்தால்தான், பாமக நிர்வாக குழு கூடி, கொள்கை ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ அல்லாமல் தனிப்பட்ட சொந்தக் காரணத்திற்காக அதிமுக கூட்டணியில் இருந்து விலகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலிதாவுடன் கூட்டணி சேர்ந்து 7 இடங்களில் பாமக போட்டியிட்டது. அப்போதே ஒரு ராஜ்யசபா சீட்டுக்கும் ராமதாஸ் கோரிக்கை விடுத்திருந்தார். தேர்தலில் 7 இடங்களிலும் தோற்ற பாமக, இப்போது 8 வது இடத்திலும் படுதோல்வியை சந்தித்துள்ளது. அதாவது ஒரு ராஜ்யசபாவையும் சேர்த்து. இதுதான் பாமகவின் இன்றைய நிலை.
இதனால், இனி அந்த கட்சியில் இருந்தால் உருப்பட முடியாது என எண்ணி அக்கட்சியினர் பலர் விலகி திமுகவில் இணைகின்றனர் என்றார் ஸ்டாலின்.