கருணாநிதி ஓய்வுபெறக் கூடாது-ஆர்.எம். வீரப்பன்
மதுரை: தனது 14 வயதிலிருந்து எழுத்து, பேச்சு, அரசியல் என தமிழ் சமுதாயத்தை விழித்தெழச் செய்தவர் முதல்வர் கருணாநிதி. எனவே அவரது மக்கள் சேவை நீடிக்க வேண்டும். தொடர வேண்டும் என்று எம்.ஜி.ஆர்.கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் கூறினார்.
திருச்செந்தூர், வந்தவாசி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி. இருந்தாலும் எங்கள் பங்கிற்கு நாங்களும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளோம்.
பிரசாரம் செய்துதான் மக்களிடம் ஓட்டு பெற வேண்டும் என்ற நிலை இப்போது இல்லை. தமிழக அரசின் பல்வேறு மக்கள் திட்டங்களால் வெற்றி வாய்ப்பு உறுதியாகி விட்டது. தேவைப்பட்டால் நான் பிரசாரத்திற்கு செல்வேன்.
முதல்வர் கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அரசியல் பணி வேறு, மக்கள் பணி என்பது வேறு.
தனது 14 வயதிலிருந்து எழுத்து, பேச்சு, அரசியல் என தமிழ் சமுதாயத்தை விழித்தெழச் செய்தவர் கருணாநிதி. எனவே அவரது மக்கள் சேவை நீடிக்க வேண்டும். தொடர வேண்டும்.
நாங்கள் உருவாக்கிய அதிமுக இன்றைக்கு இருக்கிறதா? என்று தெரியவில்லை. அதை நாங்கள் சொல்லவில்லை. அங்கு இருப்பவர்களே சொல்கிறார்கள்.
ஜெயலலிதா பொறுப்பை கையில் வைத்துக் கொண்டு பதவி கிடைக்குமா? என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். பொது மக்கள் தனது கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்களா? என்று காத்துக் கொண்டிருக்கிறார்.
எம்ஜிஆர் மீது விசுவாசம் இல்லாதவர்களெல்லாம் ஓட்டுக்காக இன்று அவரது பெயரை பயன்படுத்துகிறார்கள் என்றார் வீரப்பன்.
திமுகவுக்கு தி.க. ஆதரவு:
இந் நிலையில் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதென திராவிடர் கழக செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு கூட்டம் திராவிடர் கழக தலைவர் வீரமணி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை செயல்படுத்தி வரும் திமுகவின் வேட்பாளர்களுக்கு வந்தவாசி, திருச்செந்தூர் இடைத்தேர்தலில் ஆதரவு அளித்து வெற்றி பெற பாடுபடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
மேலும், தமிழக அரசின் சமச்சீர் கல்விக்கு ஆதரவு தெரிவிப்பதுடன், மூடநம்பிக்கைகளை வளர்க்கும் புராண இதிகாசங்களை பாடத்திட்டங்களில் இருந்து விலக்கி, மாணவர்களின் அறிவுத் திறனை வளர்க்கும் பாடத் திட்டங்களை அறிமுகப்படுத்துமாறும் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.
பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளின் பட்டியலை லிபரான் ஆணையம் காரணகாரியத்தோடு வெளியிட்டுள்ளது. பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பதில் மத்திய அரசு மேலும் காலதாமதமோ, தயக்கமோ காட்டக்கூடாது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.