கோவையில் கந்துவட்டிக்காரர் கைது - ரூ. 30 கோடி சொத்துப் பத்திரம் பறிமுதல்
கோவை: கோவையில் கந்துவட்டிக்காரர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 30 கோடி மதிப்பிலான சொத்துப் பத்திரங்கள், ஆவணங்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
கோவை பாப்பநாயக்கன் பாளையம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (27). இவர் கோவை சக்தி மெயின் ரோட்டில் செல்போன் மொத்த வியாபாரம் செய்யும் கடை நடத்தி வருகிறார்.இவர் தனது கடையை விரிவுபடுத்துவதற்காக கோவை சவுரி பாளையத்தைச் சேர்ந்த அற்புதராஜ் (47) என்பவரிடம் ரூ. 20 லட்சம் கடன் வாங்கினாராம்.
இந்தக் கடனை செலுத்த முடியாமல் சிரமப்பட்டுள்ளார் ஜெகதீசன். இதையடுத்து அற்புதராஜை தனது பாட்னராக சேர்த்து கொண்டார் ஜெகதீசன்.
பார்ட்னராக சேர்ந்த பின்னர் மேலும் ரூ. 20 லட்சம் பணத்தை அற்புத ராஜிடமிருந்து வாங்கியுள்ளார். இந்தக் கடனுக்காக ஜெகதீசனிடமிருந்து ரூ. 1 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களை அற்புதராஜ் வாங்கி வைத்து கொண்டாராம்.
இந்நிலையில் ஜெகதீசனுக்கு வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் வாங்கிய ரூ. 45 லட்சத்திற்கு வட்டியாக ரூ. 35 லட்சம் சேர்த்து ரூ. 80 லட்சம் தர வேண்டும் என்று அற்புதராஜ் கேட்டதோடு, அவ்வாறு தர மறுத்தால் தான் வைத்திருக்கும் ஆவணம் மூலம் சொத்துக்களை தன் பெயருக்கு மாற்றி விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து கோவை போலீஸ் கமிஷனரை சைலேந்திர பாபுவை அணுகிப் புகார் கொடுத்தார் ஜெகதீசன். இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தி அற்புதராஜைக் கைது செய்தனர்.
அவரது வீட்டை சோதனையிட்டதில் ரூ. 30 கோடி மதிப்பிலான சொத்துப் பத்திரங்களையும், ஆவணங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.