நாட்டில் ஊழல் சம்பவங்கள் அதிகரிப்பது மக்களை விரக்திக்குள்ளாக்கியுள்ளது-அத்வானி
முன்னாள் எம்.பி. இரா. செழியன் எழுதிய “ஷா கமிஷன் அறிக்கையில் கிடைத்ததும், தொலைந்ததும்" என்ற புத்தக வெளியீட்டு விழா மயிலாப்பூரில் நடந்தது. அத்வானி புத்தகத்தை வெளியிட்டார். எழுத்தாளர் சோ, ஐக்கிய ஜனதா தள தலைவர் ராஜசேகரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் அத்வானி பேசுகையில்,
நான் இதுவரை பல புத்தகங்களை வெளியிட்டுள்ளேன். அதில் இந்த புத்தகம் தனித்துவம் வாய்ந்தது. அரசு வெளியிட்ட அறிக்கைக்கு உபதலைப்பிட்டு மறு புத்தகமாக இரா. செழியன் வெளியிட்டுள்ளார்.
1975 முதல் 77 வரை நடந்த நிகழ்வுகளை பலர் மறந்து விட்டனர். அந்த வரலாற்று நிகழ்வுகளை உயிர்ப்பித்து மீண்டும் தந்துள்ளார். உலக அளவில் மிகச்சிறந்த ஜன நாயக நாடாக இருப்பதால் இந்தியாவுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.
நெருக்கடி நிலை கொண்டு வந்த காரணத்தினால் காங்கிரஸ் மாபெரும் தோல்வியை சந்தித்தது. இந்தியா முழுவதும் அரசுக்கு எதிராக மக்கள் கோபத்துடன் திரண்டனர். இன்றும் அதே நிலைமை மக்களிடம் உருவாகி உள்ளது.
விலைவாசி உயர்வு, ஊழலுக்கு எதிராக மக்கள் கொந்தளித்து போய் இருக்கிறார்கள். ஊழல் அதிகரித்து வருவது மக்களை விரக்தி அடைய வைத்துள்ளது. பெரும் சமூக சீர்கேடாக அது மாறி வருகிறது.
ஊழலை ஒழிக்காவிட்டால், ஊழலற்ற அரசியலை உருவாக்காவிட்டால் அமைதி பறி போய் விடும். நாடு சீர்குலைந்து போய் விடும். நாட்டின் வளர்ச்சிக்கே பெரும் சவாலாக மாறியுள்ளது ஊழல்.
ஊழலுக்கு எதிராக பாடுபட்ட, பாடுபட்டு வரும் கட்சியைச் சேர்ந்தவன் நான். ஊழலுக்கு எதிராக கடுமையாக போராடியவன். பண வீக்கத்தைப் போல ஊழலும் தற்போது சாமானிய மக்களுக்கு பெரும் துயரத்தை அளித்து வருகிறது.
கடந்த சில மாதங்களாக நாட்டில் உள்ள அரசியல் சாசன அமைப்புகளும் ஊடகங்களும் ஊழலை முன்னிலைப்படுத்தி வருகின்றன. சுப்ரீம் கோர்ட், பாராளுமன்றம், ஊடகங்கள் அனைத்திலும் இவைகள் முக்கிய இடம் பிடித்துள்ளன.
காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பதுதான். கடந்த பாராளுமன்ற கூட்டத்தில் இந்த பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன. ஊழலுக்கும் விலைவாசிக்கும் எதிராக மக்கள் எந்த அளவு கொந்தளித்து போய் இருக்கிறார்கள் என்பது எதிரொலித்தது.
இந்த பிரச்சினையை மக்கள் மத்தியில் பிரசாரமாக கொண்டு செல்ல இருக்கிறோம். முழுமையாக இந்த பிரச்சினைகளுக்கு முடிவு காணாவிட்டால் நாட்டில் அமைதி சீர்குலையும். எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்று இணைந்து முடிவு காண வேண்டும் என்றார் அத்வானி.