தென்தமிழகத்தில் கள்ள நோட்டுகளை புழகத்தி்ல் விட்ட 4 பேர் கைது
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் பகுதியில் கள்ள நோட்டுகளை புழகத்தில் விட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில் பகுதியில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடித்து புழகத்தில் விடப்பட்டு வருவதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சங்கரன்கோவில் டிஎஸ்பி செல்வராஜ் உத்தரவின்பேரில் டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் நகரின் முக்கிய இடங்களை கண்காணித்து வந்தனர். சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் நேற்று சாக்கு பையுடன் நின்ற பெண்ணை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தனர். அதில் 5 ரூ. 500 மற்றும் 5 ரூ. 100 கள்ள நோட்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
விசாரணையில் அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அசோக் நகரைச் சேர்ந்த சுப்பையா மனைவி லட்சுமி என்பதும், சிவகாசியில் இருந்து கள்ள ரூபாய் நோட்டுகளை வாங்கி வந்து சங்கரன்கோவிலில் புழகத்தில் விட்டதும் தெரிய வந்தது.
அவர் கொடுத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் சிவகாசி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன், மாரியப்பன், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கோட்டப்பட்டியைச் சேர்ந்த ராமநாதன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்கள் கள்ள நோட்டுகளை நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை மாவட்டங்களில் புழகத்தில் விட்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்.