ஏர் இந்தியா விமான கழிவறையில் கிடந்த ரூ.3 கோடி வைர கடிகாரங்கள்
மும்பை: ஏர் இந்தியா விமானத்தின் கழிவறையில் வைரம் பதித்த 20 ஸ்விஸ் கடிகாரங்களை அதிகாரிகள் கண்டெடுத்தனர். அதில் இருந்த ஒவ்வொரு கடிகாரமும் ரூ. 10 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் மதிப்புடையது. இதன் மொத்த மதிப்பு ரூ. 3 கோடி.
நேற்று முன்தினம், அபுதாபியில் இருந்து மும்பைக்கு வந்த ஏர் இந்தியா விமான கழிவறையில் கடத்தல் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து அவர்கள் கடந்த திங்கட்கிழமை இரவு மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் கழிவறையை சோதனை செய்தனர். அப்போது சுவரில் ஒரு பள்ளமான இடத்தில் கடிகாரங்களும், ரசாயனப் பொட்டலங்களும் இருந்தன.
இந்த கடிகாரங்களை யார் விமானத்தில் கொண்டு வந்து வைத்தது என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது,
நாங்கள் விமானத்திற்குள் செல்வதற்குள் பயணிகள் அனைவரும் இறங்கிவிட்டனர். இந்த கடதத்லில் துப்புறவு தொழிலாளர்களுக்கு தொடர்பு உள்ளதா என்று விசாரித்து வருகிறோம்.
ஏனென்றால் கடிகாரங்களை எடுத்துச் செல்பவர்கள் விமானங்கள் நிறுத்தும் இடத்தில் இருந்து தான் அதை எடுக்க முடியும். கடத்தியவர் விமான நிலையத்தில் இருந்து கடிகாரங்களை வெளியே எடுத்துச் செல்ல முடியாது என்று தெரிந்திருந்தால் நிச்சயம் கடத்தி இருக்கமாட்டார். ஆனால் நுழை வாயிலில் இருக்கும் பணியாளர்களுக்கு லஞ்சம் கொடுத்தால் போதும் அவர்கள் வேலை எளிதாகிவிடும் என்றனர்.