ஒசாமா டிஎன்ஏவைப் பெற அமெரிக்கா போலி தடுப்பூசி முகாம்: பாக். டாக்டர் உதவி
வாஷிங்டன்: பாகிஸ்தானில் உள்ள அப்போத்தாபாத் வீட்டில் இருப்பது ஒசாமா தானா என்பதைக் கண்டறிய அமெரிக்கா போலி தடுப்பூசித் திட்டத்தை நடத்தியது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பாகி்ஸ்தானின் அப்போத்தாபாத்தி்ல் ஒரு பெரிய வீட்டில் சொகுசாக வாழ்ந்து வந்த ஒசாமா பின் லேடனை அமெரிக்கப் படைகள் சுட்டுக் கொன்றன. ஆனால் அதற்கு முன் ஒசாமா பின் லேடன் இருப்பதை உறுதி செய்ய அமெரிக்காவின் சிஐஏ பல விசாரணைகள் நடத்தியுள்ளது.
சிஐஏ பாகிஸ்தான் டாக்டர் ஷகீல் அப்ரிதி என்பவரைப் பிடித்துள்ளது. அவரிடம் ஒசாமாவின் டிஎன்ஏ வேண்டும் என்று கேட்டுள்ளது. உடனே அவர் போலியான தடுப்பூசி முகாம் ஒன்றை நடத்தினர். அப்போத்தாபாத்தில் வீடு, வீடாகச் சென்று ஹெபாடிடிஸ் பி தடுப்பூசி போட்டுள்ளார்.
அதேபோன்று ஒசாமாவின் வீட்டுக்குள்ளும் சென்றுள்ளார். ஆனால் அவரால் ஒசாமாவையோ, அவரது குடும்பத்தினரையோ பார்க்க முடியவில்லை. இதனால் இந்த திட்டம் தோல்வியடைந்தது.
அமெரிக்காவுக்கு உதவியதற்காக டாக்டர் ஷகீல் அப்ரிதி கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் தி கார்டியன் பத்திரிக்கை தான் இந்த போலித் தடுப்பூசி முகாம் விஷயத்தை முதலில் வெளியிட்டது.
பின் லேடன் கொல்லப்பட்டதில் இருந்து பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு உதவிய பாகிஸ்தானியர்களை தேடிப்பிடித்து தண்டித்து வருகிறது. அது தீவிரவாதிகளை அழிப்பதை விட சிஐஏவுக்கு உதவியவர்களை தண்டிப்பதில் தான் ஆர்வம் காட்டி வருகிறது என்று பெரும்பாலான அமெரிக்க அதிகாரிகள் நம்புகின்றனர்.
பின் லேடன் பாகிஸ்தானில் ஒழிந்திருந்தது அந்நாட்டு அதிகாரிகளுக்கு ஏற்கனவே தெரியும் என்பதற்கு எங்களிடம் போதிய ஆதாரம் இல்லை என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் ராணுவ உளவுப் பிரிவுடன் தொடர்புள்ள போராளி அமைப்புகள் தான் வருடக்கணக்கில் பின் லேடனுக்கு ஆதரவு அளித்து வந்ததாக அமெரி்கக உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.