முல்லை பெரியாறு அணை வழக்கு: அக்.31ல் தமிழக, கேரள மாநில வக்கீல்கள் வாதம்
டெல்லி:
முல்லைப் பெரியாறு அணைக்கட்டு விவகாரம் குறித்த இடைக்கால அறிக்கையை, முன்னாள் நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழு, அக்டோபர் 31ம் தேதி தாக்கல் செய்கிறது.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் 5 பேர் அடங்கிய குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. இக்குழு அணையின் தன்மை குறித்து, பல முறை கூடி விவாதித்து, அணைக்கட்டு பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வும் நடத்தியது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கேரள மாநிலம் சார்பாக தாக்கல் செய்த ஆய்வு அறிக்கையை நேற்று இக்குழு விவாதத்திற்கு எடுத்துக் கொண்டது. அப்போது, அணையின் பலத்தை மீண்டும் ஆராய வேண்டும் என்ற கேரளத்தின் கோரிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் தமிழகத்தின் சார்பாக கலந்து கொண்ட உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் கூறுகையில், ஆகஸ்ட் 31ம் தேதி முதல் இரண்டு மாநிலங்களின் சார்பாக வழக்கறிஞர்களின் வாதம் நடைபெறும்' என்றார். அதன்பின் நீதிபதி ஆனந்த் குழுவின் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது, என கேரள மாநில வழக்கறிஞர்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.