வலுக்கும் எதிர்ப்புகள்- பெட்ரோல் விலையை ஓரளவு குறைக்க மத்திய அரசு திட்டம்?
டெல்லி: பெட்ரோல் விலை உயர்வுக்கு கடும்எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதாலும், திரினமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெறப் போவதாக மிரட்டியுள்ளதாலும், பெட்ரோல் விலை உயர்வை ஓரளவுக்கு குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோல் விலை உயர்வுக்கு நாடுமுழுவதும் மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனால் இதைப் பற்றிக் கூட மத்திய அரசு கவலைப்படவில்லை. மாறாக, திரினமூல் காங்கிரஸ் ஆதரவை வாபஸ் பெறப் போவதாக கூறியுள்ளது குறித்தே அதுஅதிகம் கவலைப்படுகிறது. மமதா பானர்ஜியை நம்ப முடியாது, செய்தாலும் செய்வார் என்ற அச்சத்தில் மத்திய அரசு உள்ளது.
இன்று திரினமூல் காங்கிரஸ் எம்.பிக்கள் குழு பிரதமரை சந்தித்து விலை உயர்வை ரத்து செய்யக் கோரி வலியுறுத்தவுள்ளது. அதற்கு முன்பாகவே விலைக் குறைப்பு குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
அதேசமயம், மமதா பானர்ஜி வழக்கம் போல இந்த முறையும் உள்நோக்கத்துடனேயே மத்திய அரசை மிரட்டி வருவதாக தெரிகிறது. தனது மாநிலத்திற்கு மத்திய அரசிடமிரு்து கூடுதல் நிதியைக் கறக்கும் நோக்கத்திலேயே பெட்ரோல் விலை உயர்வு விவகாரத்தை அவர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதாக காங்கிரஸ் வட்டாரத்தில் முனுமுனுக்கப்படுகிறது.
மக்கள் மீதான உண்மையான அக்கறையுடன் மமதா குரல் கொடுக்கவில்லை. மாறாக தனக்கு சாதகமாக மத்திய அரசை வளைக்கும் நோக்கிலேயே இந்தப் பிரச்சினையை இப்போதும் அவர் கையாள்வதாக கூறப்படுகிறது.