பஸ் கட்டணம், பால் விலை உயர்வுக்கு எதிராக டிச. 1ல் கண்டனக் கூட்டம்- திமுக
இது குறித்து திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற 2 மாதத்திற்குள்ளாக முன்னறிவிப்பு ஏதுமின்றி சுமார் ரூ.4 ஆயிரம் கோடிக்கும் மேலான வரிச்சுமையை தமிழக மக்கள் மீது சுமத்தினார். இதன் பின்னர் திடீரென்று இரவோடு இரவாக பல மடங்கு பஸ் கட்டணத்தையும் - பால் விலையையும் வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும். இந்த விலை உயர்வை கண்டித்து, 1.12.2011 வியாழக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டங்களை நடத்திட வேண்டும்.
தெருமுனை பிரசாரம்
பொதுக்கூட்டத்தினைத் தொடர்ந்து டிசம்பர் 5-ந் தேதி முதல் 12-ந் தேதி வரையிலான ஒரு வார காலத்திற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்க் கழகங்களின் சார்பாக தெருமுனைப் பிரசாரமும், பொதுக்கூட்டங்களும் அந்தந்த கழக அமைப்புகளின் சார்பில் கழக சொற்பொழிவாளர்களை தொடர்பு கொண்டு நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.