ஆந்திர சட்டசபையில் நம்பிக்கை இல்லா தீர்மானம்: காங்கிரஸ் அரசு தப்புமா?
ஆந்திர விவசாயிகளின் பிரச்சனையை முன் வைத்து தெலுங்கு தேசம் கட்சியால் கொண்டு வரப்பட்டுள்ள இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடக்கவுள்ளது. இதை தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை ஆதரித்துள்ளன.
காலையில் ஆந்திர அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது. விவாதம் முடிந்ததும் ஓட்டெடுப்பு நடத்தப்படும்.
மொத்தம் 294 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட ஆந்திர சட்டசபையில் 7 இடங்கள் காலியாக உள்ளன. இதனால் தற்போது மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 287 ஆகும்.
144 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே முதல்வர் கிரண்குமார் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு தப்பும்.
இதில், மொத்தமுள்ள 153 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 17 பேர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆதரவாளர்கள் ஆவர். முதலில் அவருடன் 21 எம்எல்ஏக்கள் இருந்தனர். இதில் 4 பேர் மீண்டும் காங்கிரஸ் பக்கம் தாவி விட்டனர்.
அதே நேரத்தில் அமைச்சர் பதவி கிடைக்காத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் அரசை எதிர்த்து வாக்களித்தால் ஆட்சி பறிபோகலாம்.
ஆனாலும், நடிகர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சி காங்கிரஸை ஆதரிக்கிறது. இந்தக் கட்சிக்கு 18 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்களில் பெண் எம்.எல்.ஏ. ஷோபா நாகிரெட்டி, ஜெகன்மோகன் அணியில் சேர்ந்து விட்டார். அவர் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார். இதனால், 17 பேர் தான் சிரஞ்சீவி கட்சியில் உள்ளனர்.
அவர்களுக்கு காங்கிரஸ் அமைச்சர் பதவி தராததால் பலரும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் சிரஞ்சீவியே சொன்னாலும் கூட அவர்கள் ஆட்சிக்கு எதிராக வாக்களிக்கும் சூழ்நிலை உள்ளது. இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்தி ஆட்சியை ஆதரித்து வாக்களிக்கச் செய்யும் முயற்சியில் ஆந்திர காங்கிரஸ் தலைவர் சத்யநாராயணா, முதல்வர் கிரண்குமார் ரெட்டி மற்றும் காங்கிரஸ் மேலிடத் தலைவர்களான குலாம்நபி ஆசாத், அகமத் படேல் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
பிரஜா ராஜ்ஜியம் கட்சி எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் உரிய பிரதிநிதித்துவம் தரப்படும் என சிரஞ்சீவியிடம் இவர்கள் உறுதிமொழி அளித்துள்ளனர்.
ஆந்திர சட்டசபையில் தற்போது அரசுக்கு ஆதரவாக 161 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதாகவும் இதனால் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பில் காங்கிரஸ் அரசு வெற்றி பெறும் என்றும் நம்பப்படுகிறது.
ஆட்சியைக் கவிழ்க்க வேண்டுமானால், ஜெகன்மோகன் ரெட்டிக்கு 40 காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைக்க வேண்டும், சிரஞ்சீவி கட்சியினரில் பெரும்பாலோனார் எதிர்த்து வாக்க்களிக்க வேண்டும். இந்த இரண்டுமே நடக்க வாய்ப்பில்லை என்பதால் அரசு தப்பிவிடும் என்றே தெரிகிறது.