விலையில்லா அரிசித் திட்டம் தொடர்கிறது- வதந்திகளை நம்பாதீர்:- தமிழக அரசு
சென்னை: ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசித் திட்டம் தொடர்கிறது. இதுகுறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசுத் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,
முதல்-அமைச்சர் ஜெயலலிதா நல்லாட்சியின் மீது பொறாமையும், காழ்ப்புணர்ச்சியும் கொண்டு ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கிலும், மக்களின் கவனத்தை ஆட்சிக்கு எதிராக திசை திருப்பும் வகையிலும் தற்போது வழங்கப்பட்டுவரும் விலையில்லா அரிசிக்கு அரசு விலை நிர்ணயம் செய்யப் போவதாகவும், விலை நிர்ணயம் செய்யப்பட்டுவிட்டதாகவும், உண்மைக்கு மாறான, பொய்யான விஷம பிரசாரங்களை ஒரு சிலர் தொடர்ந்து செய்து வருகின்றனர். இது உண்மையல்ல.
பிரதமருக்கு கடிதம்
இந்த திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்தும் நோக்கத்துடன் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2011-12-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இந்த திட்டத்திற்கு ரூ.4500 கோடி மானியமாக ஒதுக்கியுள்ளார்கள். மேலும், தற்போது ரூ.400 கோடி கூடுதல் மானியம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல், ஒரு சிலருக்கு மட்டுமே பயனளிக்கும் வகையில் தற்பொழுது மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள உணவுப் பாதுகாப்புச் சட்டத்திலிருந்து தமிழக அரசிற்கு விலக்களிக்க வேண்டுமென தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பாரத பிரதமரை கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.
தொடர்ந்து கிடைக்கும்
எனவே, பொது மக்கள் யாரும் விலையில்லா அரிசி தொடர்பான பொய்ப்பிரச்சாரங்கள் எதையும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். பொய்ப்பிரச்சாரங்கள் மற்றும் வதந்திகளை பொய்யாக்குவதுடன், உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்ற பொன்மொழியை உறுதிப்படுத்தும் வகையில், தமிழக மக்களின் நலனில் என்றும் அக்கறை கொண்ட தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின், விலையில்லாத அரிசி வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிவரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி வழங்கும் திட்டம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அரசால் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.