சங்கரன்கோவி்ல் அருகே மாரியம்மன் கோவில் கொடை விழாவில் போலீசார் குவிப்பு
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே உள்ள மாரியம்மன் கோவில் கொடை விழாவையொட்டி அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
சங்கரன்கோவில் காந்தி நகர் பொட்டலில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் கொடை விழா நேற்று துவங்கி 2 நாட்கள் நடக்கிறது. சங்கரன்கோவில் கழுகுமலை சாலையில் உள்ள மாரியம்மன் கோவில் கொடை விழா கடந்த 7-2-2012 அன்று நடந்தது. அப்போது இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கலவரம் வெடித்தது. இதில் கார், ஆட்டோ, பைக்குகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இது தொடர்பான வழக்கு நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்தாண்டு காந்தி நகர் மாரியம்மன் கோவில் கொடை விழா நேற்று துவங்கியது. விழாவை முன்னி்ட்டு அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க நெலலை சரக டி.ஐ.ஜி. வரதராஜ் தலைமையில், எஸ்.பி. விஜயேந்திர பிதாரி, டி.எஸ்.பி. கலிபுல்லா மற்றும் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கலவர தடுப்பு வாகனங்கள் பெரிய பள்ளிவாசல் மற்றும் கழுகுமலை சாலையில் நிறுத்தப்பட்டுள்ள. நெல்லை ஆர்.டி.ஓ. இளங்கோ மறறும் தாசில்தார் தாமோதரன் முகாமிட்டு ஆலோசனை நடத்தினர். கொடை விழாவில் நேற்று மாலை மாரியம்மன் கோவிலிலிருந்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் நாட்டாமை தலைமையில் கழுகுமலை ரோடு மற்றும் மெயின்ரோடு வழியாக முப்புடாதி அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாகச் சென்றனர்.
பின்னர் தீர்த்த குடங்கள் எடுத்து கழுகுமலை சாலை வழியாக மீண்டும் மாரியம்மன் கோவிலை அடைந்தனர். கழுகுமலை சாலையில் ஊர்வலம் வந்தபோது அங்கு மற்றொரு பிரிவினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 2வது நாளான இன்று இரவு இன்னிசை நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைவதால் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.