சிறை சென்ற திமுகவினரை கெளரவப்படுத்தும் மு.க.ஸ்டாலின்: குஷியில் கட்சியினர்
சென்னை: திமுக நடத்திய சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி வரும் 21ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.
அதிமுக அரசைக் கண்டித்து கடந்த 4ம் தேதி திமுக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் அறப்போராட்ட வழியில் கலந்து கொள்ள வேண்டும். அதே வேளையில் எத்தனை நாட்கள் சிறையில் அடைத்தாலும் அதை தாங்கிக் கொள்ள வேண்டும். மாறாக யாரும் ஜாமீன் கோரக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார். இதையடுத்து இந்தப் போராட்டத்தில் திமுக முன்னணி தலைவர்கள் முதல் கடைக்கோடி தொண்டன் வரை அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
சிறையில் நீண்ட நாட்கள் இருக்கும் நபர்களை கௌரவப்படுத்தும் விதமாக சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் யோசனையை கருணாநிதி ஏற்றுக் கொண்டதாகக் கூறப்பட்டது. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை காலையில் கைது செய்து மாலையில் விடுதலை செய்துவிட்டது அதிமுக அரசு.
இந்த நிலையில் அனைவருக்கும் சான்றிதழ் கொடுப்பது என்பது சரியாக இருக்காது. மேலும் சுமார் 10 முதல் 20 நாட்களுக்கும் மேல் சிறையில் இருந்தவர்களுக்கு வழங்கினால் தான் அந்த சான்றிதழுக்கு என ஒரு மரியாதை இருக்கும் என மு.க.ஸ்டாலினிடம் கருணாநிதி எடுத்துக் கூறியதாக ஒரு தகவல் உலா வருகின்றது.
இந்நிலையில் திமுக நடத்திய சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களைக் கௌரவிக்கும் விதமாக அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி வரும் 21ம் தேதி அன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவிருப்பதாகக் கூறப்படுகின்றது. முதல் கட்டமாக சென்னையில் சிறை சென்றவர்கள் கௌரவப்படுத்தப்பட உள்ளனர்.
இதேபோன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் தொண்டர்களைக் கௌரவப்படுத்தும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுமாம். இந்தத் தகவல் அறிந்த திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி கடலில் மிதந்து வருகின்றனர்.