ராக்கி கட்ட வர்றாங்க, 'ஷட்டவுன்' பண்ணிட்டு ஓடு மாப்ளே ஓடு...!
ரக்ஷா பந்தன் என்பது, சகோதரர்களைப் போற்றி வணங்கி சகோதரிகள் கொண்டாடும் திருவிழா. வட இந்தியாவில் மூத்த சகோதரர்களுக்கு கையில் ராக்கி கயிறு கட்டி பெண்கள் ஆசிர்வாதம் பெறுவார்கள். ராக்கி இப்போது தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் கூட பிரபலமாக உள்ளது.
ஆனால் ஐடி அலுவலகங்களில் மட்டும் ராக்கி பண்டிகை பெரிய அளவில் கொண்டாடப்படுவதில்லையாம். காரணம் என்ன என்று சரியாகத் தெரியவில்லை. ஆனால் ஆண்கள் இந்த நாளன்று பெரும்பாலும் அலுவலகத்தில் இருப்பதை தவிர்க்க விரும்புகிறார்களாம்.
இதுகுறித்து மாத்யூ என்ற ஐடி ஊழியர் கூறுகையில், நிச்சயம் எனது அலுவலகத்தில் இன்று பல பேர் லீவு போட்டிருப்பார்கள். காரணம், அவர்கள் ராக்கிக் கயிறை எதிரிகளாகப் பார்ப்பவர்கள். அழகான பெண்கள் தங்களை அண்ணா என்று அழைப்பதை அவர்கள் வெறுக்கிறார்கள் என்றார் சிரித்தபடி.
மேலும் அவர் கூறுகையில் எங்களது அலுவலகத்தில் ராக்கி கயிறு கட்டுவதெல்லாம் பெரும்பாலும் நடப்பதில்லை. எனது அலுவலகம் என்றில்லை, ஐடி அலுவலகங்களில் பெரும்பாலும் இதை பெரிதாக கொண்டாடுவதாக நான் கேள்விப்பட்டதில்லை என்றார்.
நிஷா என்ற இன்னொரு ஐடி ஊழியர் கூறுகையில், ரக்ஷா பந்தன் அன்று எங்களது அலுவலகத்தில் பணியாற்றும் ஆண் ஊழியர்களெல்லாம் எப்படிடா ராக்கி கயிற்றிலிருந்து தப்புவது என்றுதான் சிந்தனையில் இருப்பார்கள். ஏதாவது பேசி கையில் கயிற்றைக் கட்டி விடுவார்களோ என்று பயந்தபடி இருப்பார்கள்.
ஆனால் நாங்கள் கையில் சிக்குவோருக்கெல்லாம் ராக்கி கயிறை கட்ட மாட்டோம். அதற்கென்று புனிதம் உள்ளது. எனவே உண்மையிலேயே நாங்கள் அண்ணனாக யாரையாவது உணர்ந்தால் நிச்சயம் அவர்களுக்கு கயிறு கட்டி, அவர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட் எல்லாம் கொடுத்து அவர்களிடம் ஆசிர்வாதமும் பெறுவோம் என்றார்.
பேஸ்புக்கை மூடு, செல்போனை ஆப் பண்ணு
இன்னும் சில உஷாரான ஆண்கள் என்ன செய்கிறார்கள் என்றால் பேஸ்புக், டிவிட்டர் பக்கம் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லையாம். இவற்றைத் தற்காலிகமாக துண்டித்து விடுகிறார்களாம். அதேபோல இன்று முழுக்க செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்துவிடுகிறார்களாம். இதுகுறித்து பஞ்சாபைச் சேர்ந்த சிராக் கபூர் கூறுகையில், எந்த ரூபத்திலும் எங்களைப் பார்த்து அண்ணா என்ற வார்த்தை வருவதை நாங்கள் விரும்புவதில்லை. நாங்கள் வருடம் பூராவும் பின்னாலேயே சுற்றி வந்த பெண்கள், எங்களைப் பழிவாங்க இந்த நாளைப் பயன்படுத்திக் கொள்வார்கள். எனவே இன்று முழுவதும் நாங்கள் ஷட்டவுன் தான். நாம் உயிராக நினைத்திருக்கும் பெண், நம்மை சகோதரா என்று அழைப்பதை நிச்சயம் இதயத்தை நொறுங்கச் செய்யும் வார்த்தையாகும். இதை ஏற்கவே முடியாது என்கிறார் சீரியஸாக.
அண்ணனாக இருப்பதில் என்னப்பா தப்பு, பயப்படாம கையைக் காட்டுங்க!