ஒவ்வொரு பெண்ணுக்கும் ஃப்ரீயா வீடு... குஜராத்தைக் கலக்கும் காங். தேர்தல் 'ஸ்டண்ட்'!
குறிப்பாக வீட்டுக்கு ஒரு பெண்ணுக்கு இலவச வீடு என்ற காங்கிரஸின் அறிவிப்பு அங்குள்ளவர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளதாம். சொன்னதோடு நில்லாமர், 20 லட்சம் விண்ணப்பப் படிவங்களை அச்சடித்து அதை வீடு வீடாக போய் பெண்களிடம் கொடுக்கவும் ஆரம்பித்துள்ளனராம் காங்கிரஸார். இது பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாம்.
இதுகுறித்து குஜராத் மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனீஷ் தோஷி கூறுகையில், எங்களது 2012ம் ஆண்டுக்கான 12 அம்ச மக்கள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், குஜராத்தில், ஒவ்வொரு பெண்ணுக்கும் சொந்த வீடு தரப் போகிறோம். நாங்கள் ஆட்சிக்கு வரும்போது இதைச் செய்வோம். இதற்காக 20 லட்சம் விண்ணப்பப் படிவங்களை அச்சடித்துள்ளோம். தற்போது அது விநியோகிக்கப்பட்டு வருகிறது.
'own your own home' என்று இந்தத் திட்டத்துக்கு காங்கிரஸ் பெயர் சூட்டியுள்ளது.
சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸின் சக்திசிங் கோஹில் கூறுகையில், எங்களது கட்சி ஆட்சிக்கு வந்தால், 3 லட்சம் பெண்களுக்கு முதல் ஆண்டில் இலவசமாக வீடு தரப்படும். மொத்தம் 10 லட்சம் வீடுகளைக் கட்ட இலக்கு நிர்ணயித்துள்ளோம். மாநிலத்தில் உள்ள பெண்களுக்கு இதன் மூலம் சொந்தமாக வீடு கிடைக்கும். சொந்த வீடே இல்லாத பெண்கள் இல்லை என்ற நிலையை குஜராத்தில் உருவாக்குவோம் என்றார்.
குஜராத்தில் உள்ள எட்டு மாநகராட்சிகள், 160 நகராட்சிகளில் உள்ள பெண்களின் சமூக, பொருளாதார நிலையை கணக்கெடுத்து விண்ணப்ப் படிவங்களை கொடுத்து வருகிறார்கள் காங்கிரஸார்.
பல இடங்களில் இந்த விண்ணப்பங்களைப் பெற காங்கிரஸ் அலுவலகங்கள் முன்பு பெண்கள் கூட்டம் கூட்டமாக கூடி நின்று முண்டியடித்துப் பெறுவதைக் காண முடிகிறது. பெண்களிடையே தங்களது திட்டத்துக்குக் கிடைத்துள்ள வரவேற்பு காங்கிரஸாரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.
இதை உன்னிப்பாக கவனித்து வரும் முதல்வர் நரேந்திர மோடி, இந்தத் திட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், காங்கிரஸார் வெற்றுத் தாள்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் குடியரசுத் தலைவர் அல்லது பிரதமர் என யாருடைய அதிகாரப்பூர்வ சீலும் இல்லை, கையெழுத்தும் இல்லை. இது மக்களை ஏமாற்றும் செயலாகும். இதை பத்திரம் போல கூறி மக்களை முட்டாளாக்கப் பார்க்கிறது காங்கிரஸ் என்றார் மோடி.
தேர்தல் சண்டை ஆரம்பித்து விட்டது, வெற்றி பெறப் போவது யார் என்பதை வேடிக்கை பார்ப்போம்...!