நகைகள் ஏற்றுமதியில் இத்தாலியை பின் தள்ளிய இந்தியா, அமெரிக்கா!
இதன்மூலம் முதல் முறையாக உலகின் முன்னணி ஆபரண ஏற்றுமதி நாடு என்ன தகுதியை இத்தாலி இழந்துள்ளது.
இத்தாலியின் உற்பத்தி செய்யப்படும் தங்க ஆபரணங்களில் 70 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 30 சதவீதம் உள்நாட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
இந் நிலையில், ஸ்பெயின், போர்சுகல் ஆகிய நாடுகளுடன் இத்தாலியும் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதனால் அந்த நாட்டின் அனைத்துத் தொழில்களும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.
ஐரோப்பிய நாடுகளின் நிலவும் பொருளாதார மந்த நிலையால் இத்தாலியின் ஆபரணங்கள் உற்பத்தித் துறைக்கு போதிய முதலீடுகள் கிடைக்கவில்லை. வங்கிகள் கடன் தருவதைத் குறைத்துவிட்டன, கடனுக்கான வட்டியும் பல மடங்கு உயர்ந்துவிட்டது. இதனால் ஆபரணத் தயாரிப்புத் துறை பெரும் மந்தமடைந்துள்ளது. ஏற்றுமதிகளும் குறைந்துவிட்டன. இதன் காரணமாக ஏராளமானோர் வேலைகளையும் இழந்துள்ளனர்.
மேலும் இத்தாலியிலேயே தங்க ஆபரணங்களின் விலையும் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் நகை வாங்குவோர் குறைந்து, விற்பனையும் தேக்கம் அடைந்துள்ளது.
இவ்வாறு பல வகைகளிலும் இத்தாலிய ஆபரணத் தயாரிப்பாளர்கள் பெரும் சிக்கலில் மாட்டியுள்ளதால், இந்திய மற்றும் அமெரிக்க நகைத் தயாரிப்பாளர்களுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் பெரும் சாதகமாக அமைந்து விட்டது.
இந்திய நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு வரை எந்தவித வரியுமின்றி தங்க ஆபரணங்களை ஏற்றுமதி செய்கின்றனர். ஆனால் இத்தாலிய தங்க ஆபரண நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும்போது வரி செலுத்த வேண்டியுள்ளது. இதே போன்று ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது, இந்தியா மற்றும் பிரேசில் நாட்டு நிறுவனங்கள் குறைவான வரியே செலுத்துகின்றனர்.
இவையெல்லாம் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் சாதகமான அம்சங்களாகும்.