சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: பிரகாஷ்காரத்
திருப்பூர்: சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.. இதனால் 20 கோடிப் பேர் பாதிக்கப்படுவர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் பிரகாஷ்காரத் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் சுந்தரய்யா நூற்றாண்டு விழாவில் பங்கேற்று பிரகாஷ்காரத் பேசுகையில்,
உரவிலையேற்றம், விதை விலையேற்றம், மின்வெட்டு பிரச்சினையால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு விட்டது. சில்லரை வர்த்தகத்தில் நேரடியாக 4 கோடி பேர் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் மத்திய அரசு சில்லறை வணிகத்தில் வால்மார்ட் போன்ற நிறுவனங்களை அனுமதித்து உள்ளது. இந்த நிறுவனங்கள் சில்லரை வர்த்தகத்தில் நுழைந்தால் 20 கோடி பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதை மார்க்சிஸ்ட் கட்சி அனுமதிக்காது.
திருப்பூரில் கடுமையான மின்வெட்டு பிரச்சினையால் தொழில்கள் முழுமையாக முடங்கி போய்விட்டது. ஜெனரேட்டரை பயன்படுத்த முடியாத வகையில் டீசல் விலை உயர்ந்து வருகிறது. மின்பற்றாக்குறையை சீரமைக்க இன்னும் காலம் பிடிக்கும். அதுவரை தொழில் நிறுவனங்களுக்கு ஜெனரேட்டர் பயன்பாட்டுக்கான டீசல் மீதான கலால், விற்பனை வரி உள்ளிட்டவற்றை குறைத்து, ரத்து செய்ய வேண்டும். தொழில் நிறுவனங்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறது.
தொழிலாளர்களின் நலன் காக்க வேண்டி இந்தியாவில் உள்ள மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வருகிற பிப்ரவரி மாதம் 20, 21ந் தேதிகளில் பொது வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பொது வேலைநிறுத்த போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முழு ஒத்துழைப்பு கொடுக்கும்.
தலித் மக்கள் மற்றும் இதர அடித்தட்டு மக்கள் மீதான வன்கொடுமை அதிகரித்து வருகிறது. சாதிய சக்திகள் தலித் மக்களுக்கு எதிராக திரண்டு தாக்குதல்களை நடத்துகிறது. சாதி மறுப்பு திருமணம் செய்த தலித் மக்கள் தங்கள் உரிமையை நிலைநாட்ட நினைக்கும் போது தாக்குதல்களை சந்தித்து வருகின்றனர் என்றார் அவர்.