கொல்கத்தாவில் பெண் நிருபரிடம் சில்மிஷம் செய்த பிஎஸ்எப் வீரர் கைது!
கொல்கத்தா: கொல்கத்தாவில் நேற்று இரவு பெண் பத்திரிக்கையாளரிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட எல்லை பாதுகாப்பு படை வீரரை பிடித்து அடித்து உதைத்த பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
கொல்கத்தாவில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஷியாம்பஜாரில் நேற்று இரவு ஒரு பெண் பத்திரிகையாளர் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் நிருபரை ஈவ் டீசிங் செய்தனர். பின்னர் அவரை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.
அவர்களில் ஒரு வீரர், நிருபரை பாலியல் சில்மிஷம் செய்துள்ளார். இதனை பொறுக்க முடியாத அந்தப் பெண் நிருபர் கத்தி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு பொதுமக்கள் ஒன்றுதிரண்டு அந்த பாதுகாப்பு படை வீரரை பிடித்து அடித்து உதைத்தனர். அவருடன் வந்திருந்த மற்ற இரண்டு வீரர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லேசான தடியடி நடத்தி பொதுமக்களை கலைத்தனர். பின்னர் பொதுமக்கள் பிடியில் இருந்து அந்த வீரரை மீட்டு கைது செய்து சிறையில் அடைத்தனர்.
எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களே பெண் நிருபரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் கொல்கத்தாவில் புகார் எழுந்துள்ளது.