தூத்துக்குடியில் ஓடும் பஸ்சில் பயங்கர ஆயுதங்களுடன் மாணவர்கள் மோதல்: பீதியில் ஓடிய பயணிகள்
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே பயங்கர ஆயுதங்களால் பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் மோதலைப் பார்த்து பயந்து போன பயணிகள் அச்சத்துடன் இறங்கி ஓட்டம் பிடித்தனர்.
தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில், இன்று காலையில் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தில் பள்ளி மாணவர்களும் ஏராளமான பயணிகளும் இருந்தனர். முப்பாத்து ஓடை என்ற இடத்துக்கு அருகே பேருந்து சென்ற போது, பேருந்தினுள் இன்னொரு மாணவர்கள் குழு ஏறியது. அவர்கள் , கைகளில் கம்பு கட்டைகள் வைத்திருந்தனர். அந்த மாணவர் கும்பல், திடீரென பேருந்தினுள் இருந்த பத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை சரமாரியாக தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவர்களும் திருப்பித் தாக்கினர். இந்த அடிதடி ரகளையைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் பேருந்து இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர்.
ஓட்டுநர் உடனடியாக பேருந்தினை தென்பாகம் காவல் நிலையத்துக்கு ஓட்டிச் சென்றார். அப்போது அவசரம் அவசரமாக அடிதடியில் ஈடுபட்ட மாணவர்கள் இறங்கி ஓடிவிட்டனர். இதனையடுத்து தென்பாகம் போலீஸார் புகார் பதிவு செய்து, தப்பியோடிய மாணவர்களைத் தேடி வருகின்றனர்.