ஜருகண்டி, ஜருகண்டி: திருப்பதி கோவிலில் 'முனி' லாரன்சின் தாயை பிடித்து தள்ளியதால் பரபரப்பு

டான்ஸ் மாஸ்டரும், நடிகருமான லாரன்ஸ் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தாருடன் திருப்பதி வந்தார். நேற்று அதிகாலை 6.30 மணிக்கு அவர் வைகுண்டம் க்யூ காம்பிளக்ஸ் வழியாக கிரேடு 2 விஐபி தரிசனத்தில் குடும்பத்தாருடன் சென்று ஏழுமலையானை தரிசித்தார். சாமி தரிசனம் செய்தபோது அங்குள்ள ஊழியர்கள் ஜருகண்டி, ஜருகண்டி என்று கூறி லாரன்சின் தாய், மனைவி மற்றும் குழந்தையைப் பிடித்து தள்ளினர். இதில் ஆத்திரமடைந்த லாரன்ஸ் அந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து கோவில் ஊழியர்கள் சிலர் வந்து அவரை சமரசம் செய்து வைத்தனர்.
கோவிலில் இருந்து வெளியே வந்த லாரன்ஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
எனது தாயாருக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அவருக்கு அறுவை சிகிச்சை நல்லபடியாக நடக்க வேண்டும் என்று ஏழுமலையானிடம் வேண்டிக் கொண்டேன். அவர் பூரண குணமடைந்தவுடன் சாமியை தரிசிக்க குடும்பத்துடன் இங்கு வந்தோம். சாமியை தரிசித்துக் கொண்டிருக்கையில் கோவில் ஊழியர் ஒருவர் எனது தாயை பிடித்து தள்ளிவிட்டார். இதில் அவர் கீழே விழுந்துவிட்டார். இது மரியாதை அல்ல கொடூரமான செயல் ஆகும். எனது குடும்பத்தை அவமானப்படுத்துவது போல் உள்ளது.
அதனால் தான் ஆவேசமாக பேசிவிட்டேன். இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு திருப்பதி கோவிலில் சிவப்பு கம்பளம் விரித்து மரியாதை அளிக்கிறார்கள். ஆனால் இந்தியாவை அதிலும் குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நடிகரான என்னுடைய தாயை பிடித்து கீழே தள்ளியது தரக்குறைவான செயல் ஆகும். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இது குறித்து ழுமலையான் கோவில் துணை அதிகாரிகள் சின்னம்காரி ரமணா, கேசவராஜு ஆகியோர் கூறுகையில்,
கோவிலில் கடந்த சில நாட்களாக கூட்டம் அதிகமாக உள்ளது. நடிகர் லாரன்ஸ் சாமியை தரிசிக்க வந்தார். விஐபி தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு கொடுக்கும் மரியாதையை அவருக்கும் கொடுத்தோம். ஆனால் அவர் செய்தியாளர்களிடம் கோவில் ஊழியர் மீது குறை கூறியிருப்பது சரியல்ல. அதுவும் செய்தியாளர்களிடம் குறை கூறியது தவறு. அவரது இந்த குற்றச்சாட்டால் கோவில் ஊழியர்கள் மனவேதனை அடைந்துள்ளனர் என்றனர்.












Click it and Unblock the Notifications