இலங்கை அரசுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் உண்ணாவிரதம் இருந்த 2 வெள்ளையர்கள்
பெர்த்: ஈழத் தமிழர்களுக்காக போராடும் தமிழக கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆஸ்திரேலியாவில் 2 வெள்ளையர்கள் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தனர்.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு தமிழக அரசியல் கட்சிகள், முக்கிய நபர்கள் என்று பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஈழத் தமிழர்களுக்காக கடந்த 2ம் தேதி நடிகர், நடிகையர்கள் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தனர்.
இந்நிலையில் தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆஸ்திரேலியாவில் வசிக்கும் வெள்ளையர்கள் ஆதரவு கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்து தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல ஈழத் தமிழர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வரும் கிறிஸ்டீன் ஓபியஸ் மற்றும் சிங்கள இனவாத அரசுக்கெதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துவரும் கேரி ஹாலிடே ஆகியோர் தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம்
போர்க்குற்றவாளிகளை சர்வதேச விசாரணைக்குட்படுத்தி தண்டிக்க வேண்டும், இலங்கை மீது பொருளாதரத் தடை விதிக்க வேண்டும், தமிழர்களின் விருப்பத்தை அறிய பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைளை வலியுறுத்தி பெர்த் நகரில் அந்த 2 பேரும் உண்ணாவிரதம் இருந்தனர்.
தமிழக மாணவர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம்
தமிழக மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்து காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உண்ணாவிரதம் இருந்தனர்.
நாங்களும் உண்ணாவிரதம் இருப்போம்
ஓபியஸ் மற்றும் கேரி உண்ணாவிரதம் இருப்பது பற்றி அறிந்த தமிழர்கள் 10க்கும் மேற்பட்டோர் அங்கு வந்து அவர்களும் உண்ணாவிரதம் இருந்தனர்.
போர்க்குற்றவாளியை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்
உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இலங்கை கிரிக்கெட்டுக்கு தடைவிதிக்க வேண்டும், போர்க்குற்றவாளி ராஜபக்சேவை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பிளக்கார்டுகள் வைத்திருந்தனர்.