'மிசா' காலத்தில் இந்திரா வீட்டில் புகுந்த அமெரிக்க உளவாளி: விக்கிலீக்ஸ்
டெல்லி: இந்தியாவில் அவசர நிலை பிரகனடப்படுத்தப்பட்ட பின்னர் இந்திரா காந்தியின் அரசியல் நடவடிக்கைகளை புரிந்து கொள்ள முடியாமல் ஒருபக்கம் அமெரிக்கா கடுமையாக திணறியபோதும், இந்திராவின் வீட்டுக்குள்ளேயே கிட்டத்தட்ட 2 ஆண்டு காலத்திற்கு தனது உளவாளியை வைத்திருந்தது என்ற அதிர்ச்சித் தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
1975ம் ஆண்டு முதல் 1977 வரை இந்த உளவாளி, இந்திரா காந்தியின் வீட்டுக்குள் ஊடுறுவியிருந்ததாக விக்கிலீக்ஸ் தெரிவிக்கிறது.
விக்கிலீக்ஸ் சமீபத்தில் ஒரு தொகுப்பு அமெரிக்க தூதரக தகவல்களை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா தொடர்பான பல முக்கியச் செய்திகளும் அடங்கியுள்ளன. அதிலிருந்து சில பகுதிகள்...
பிரதமர் வீட்டில் உளவாளி
பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியிருந்த காலம் அது. இந்திராவின் அடுத்த மூவ் என்ன என்பதைக் கணிக்க முடியாமல் திணறியது அமெரிக்கா. இந்த நிலையில்தான் 1975ம் ஆண்டு தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவரை பிரதமர் வீட்டுக்குள்ளேயே ஊடுறுவ வைத்தது அமெரிக்கா.
76 மத்தியில் வந்த முக்கியத் தகவல்
1976ம் ஆண்டு மத்தியில், பிரதமர் இந்திரா காந்தியின் முக்கிய முடிவு குறித்த ஒரு யூகத் தகவலை அமெரிக்க தூதரகத்திற்கு இந்த உளவாளி தகவல் அனுப்பினாராம். அது, 77 மத்தியில் பொதுத் தேர்தலுக்கு இந்திரா காந்தி அழைப்பு விடலாம் என்பது.
பக்க பலமாக இருந்த சஞ்சய் காந்தி, தவன்
1975ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி அவசர நிலையை பிரகடனம் செய்தார் இந்திரா. அப்போது அவருக்கு பின்பலமாக இருந்தவர்கள் மகன் சஞ்சய் காந்தியும், ஆர்.கே.தவனும்தான். இதை இந்திரா வீட்டில் நுழைந்த உளவாளி மூலம் உறுதிப்படுத்த முடிந்ததாக அமெரிக்க தூதரக தகவல் தெரிவித்துள்ளது.
இந்திராவை அதிகாரத்தில் நீடிக்க வைக்க
இதுகுறித்து அமெரிக்க தூதரகம் அனுப்பிய கடிதத்தில், இந்திரா காந்தியை பதவியில் நீடிக்கச் செய்ய வேண்டும். அவர் கையில்தான் அதிகாரம் நீடிக்க வேண்டும் என்பதே சஞ்சய் காந்தி, தவன் ஆகியோரின் ஒரே நோக்கமாகஇருந்தது என்று அந்தத் தகவல் கூறுகிறது.
காங்கிரஸ் எம்.பிக்களின் குழப்பம்
எமர்ஜென்சி குறித்து காங்கிரஸ் எம்.பிக்களிடமே பெரும் குழப்பம் இருந்ததாம். சிலர் இது மூன்று மாதம் நீடிக்கலாம் என்றனராம். சிலர் இது அதிகபட்சம் 6 மாதம் நீடிக்கும் என்று கூறினார்களாம். யாருக்கும், இந்த எமர்ஜென்சி எத்தனை காலத்திற்கு நீடிக்கும் என்பது குறித்து சரியான தகவல் இல்லை என்று அமெரிக்க தகவல் தெரிவித்துள்ளது.
வலுத்து வந்த சஞ்சயின் பிடி
எமர்ஜென்சிக்குப் பிறகு சஞ்சய் காந்தியின் பிடி காங்கிரஸ் கட்சிக்குள்ளும், ஆட்சி அதிகாரத்திற்குள்ளும் வலுத்து வருவதாகவும் இந்திரா வீட்டு உளவாளி தெரிவித்ததாக அமெரிக்க தூதரக க டிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேபிள் தகவலில், இளைஞர் காங்கிரஸ் கட்சி தற்போது சஞ்சய் காந்தி தலைமையில் மிகப் பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களின் ஆதரவைப் பெற்ற சஞ்சய்
இந்திரா காந்தி அமைச்சரவையில் இருந்த பல அமைச்சர்களின் ஆதரவும் சஞ்சய் காந்திக்குக் கிடைத்ததாகவும், அவர் ஒரு பெரிய சக்தியா உருவெடுத்து வருவதாகவும் கேபிள் தகவல் கூறுகிறது. முக்கிய முடிவுகளில் அவரது தலையீடு இருப்பதாகவும் கேபிள் தகவல் கூறியுள்ளது.