சஞ்சய் காந்தியைக் கொல்ல 3 முறை முயற்சி நடந்தது - விக்கிலீக்ஸ்
டெல்லி: சஞ்சய் காந்தியைக் கொலை செய்வதற்கு மூன்று முறை முயற்சி நடந்தது என்று விக்கிலீக்ஸ் தகவல் கூறுகிறது.
அமெரிக்க தூதரக தகவலை மேற்கோள் காட்டி விக்கிலீக்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
உ.பி.க்கு ஒருமுறை அவர் வந்தபோது மிகவும் சக்தி வாய்ந்த துப்பாக்கியால் அவரை சுட்டுக் கொல்ல முயற்சிக்கப்பட்டது என்றும் அந்த அமெரிக்க கேபிள் தகவல் தெரிவிக்கிறது.

1976ல் துப்பாக்கிச் சூடு
1976ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்க தூதரகம் அனுப்பிய கடிதத்தில், பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தியை அடையாளம் தெரியதா நபர் ஒருவர் கொலை செய்வதற்கு மிகவும் சாதுரியமான முறையில் திட்டமிட்டிருந்தார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது என்று கூறப்பட்டுள்ளது. அவசர நிலை காலகட்டத்தில் இந்த முயற்சி நடந்துள்ளது.

3 முறை சுடப்பட்டார் சஞ்சய்
மேலும் அதில் கூறுகையில், ஆகஸ்ட் 30 அல்லது 31ம் தேதி இந்த தாக்குதல் நடந்தது. அப்போது சஞ்சய் காந்தியை மூன்று முறை அந்த நபர் சுட்டார். ஆனால் சஞ்சய் காந்தி பெரும் காயம் ஏதுமில்லாமல் உயிர் தப்பி விட்டார் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய உளவுத்துறையிடமிருந்து இந்தத் தகவல்களைப் பெற்றதாகவும் அமெரிக்க தூதர் தனது கடிதத்தில் கூறியிருக்கிறார்.

இது 3வது முயற்சியாம்
இதுகுறித்து உளவுத்துறையினரிடம் பேசியபோது சஞ்சய் காந்தியைக் கொல்ல நடந்த 3வது முயற்சி இது என்று தெரிவித்தனர். உ.பியில் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் மிகவும் நவீனமான துப்பாக்கியைப் பயன்படுத்தியிருந்தார் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது என்று அந்த கடிதம் கூறுகிறது.

சஞ்சய்க்கு எதிரிகள் ஜாஸ்தி
சஞ்சய் காந்தி தனது தாயாரைப் போலவே மிகவும் தைரியமானவர், அதிரடியாக, ஆணித்தரமாக செயல்படுபவர். இதனால் அவருக்கு எதிரிகளும் அதிகம் இருந்தனர் என்றும் அமெரிக்க தூதரின் கடிதம் சொல்கிறது.

விமான விபத்தில் மரணமடைந்த சஞ்சய் காந்தி
3 முறை கொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பிய சஞ்சய் காந்தி 1980ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி டெல்லியில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவருக்கு வயது 33 தான். இந்திரா காந்தியின் அடுத்த வாரிசாக கட்சிக்குள் வெகு வேகமாக உருவெடுத்து வளர்ந்து வந்து கொண்டிருந்த நிலையில் அவர் அகால மரணமடைந்தார்.

சஞ்சய் மரணத்தால் அரசியலுக்கு வந்த ராஜீவ்
சஞ்சய் காந்தியின் திடீர் மரணத்தால் அதுவரை விமானியாக இருந்து வந்த அவரது அண்ணன் ராஜீவ் காந்தி அரசியலுக்கு வர நேரிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications