பெங்களூர் பாஜக அலுவலகம் அருகே குண்டு வெடிப்பு: பைக்கில் வைக்கப்பட்டிருந்தது- 13 பேர் காயம்!
பெங்களூர்: பெங்களூர் பாஜக அலுவலகம் அருகே மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 8 போலீசார் உள்பட 13 பேர் காயமடைந்தனர். குண்டு வெடித்ததில் 3 கார்களும் போலீஸ் வேனும் எரிந்து சாம்பலாயின.
இந்த மோட்டார் சைக்கிள் தமிழ்நாடு பதிவு எண் கொண்டதாகவும். இது உண்மையான எண்ணா அல்லது போலி நம்பர் பிளேட் பொறுத்தப்பட்டதா என்பது தெரியவில்லை. இந்த பைக் திருடப்பட்டதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த குண்டுவெடிப்பில் இந்தியன் முஜாகிதீன் அமைப்புக்குத் தொடர்பிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கர்நாடகா மாநில சட்டசபைக்கான தேர்தல் மே 5ம் தேதி நடைபெற உள்ளது. இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.
இதனால் பெங்களூர் மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் குவிந்திருந்தனர். போலீஸ் பாதுகாப்பும் அங்கு போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை 10.45 மணியளவில் திடீரென பாஜக அலுவலகத்துக்கு வெளியே பெரும் வெடிச் சப்தம் கேட்டது. இதனால் அங்கிருந்தோர் சிதறி அடித்து ஓடினர்.
முதலில் ஒரு காரில் கேஸ் சிலிண்டர் மாற்றும்போது அது வெடித்ததாகக் கருதப்பட்டது. ஆனால், பின்னர் வெடித்தது வெடிகுண்டு என்று தெரியவந்தது.
இந்த குண்டு ஒரு மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்தது. குண்டு வெடித்தவுடன் அருகில் இருந்த 3 கார்களும் போலீஸ் வேனும் தீப் பிடித்துக் கொண்டன. அருகில் இருந்த கட்டடங்களின் கண்ணாடி ஜன்னல்களும் வெடித்துச் சிதறின.
இதையடுத்து அப்பகுதிக்கு தீயணைப்புப் படையினர் உடனே விரைந்து எரிந்து கொண்டிருந்த வாகனங்களின் தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் வாகனங்கள் முழுவதும் எரிந்து போய்விட்டன.
காயமடைந்தவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வந்தன. ஆனால், இதை போலீசார் மறுத்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் மல்லேஸ்வரம் கே.சி. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பு குறித்து தேசிய புலனாய்வு அமைப்பான NIA விசாரணையில் இறங்கியுள்ளது. பாஜக அலுவலகத்தில் உள்ள சிசிடிவியில் பதிவான விவரங்களை வைத்து குண்டு வைத்தவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டது ஐஇடி வகை வெடிகுண்டு (improvised explosive Device- IED) என்பது உறுதியாகியுள்ளது.
குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட தமிழ்நாடு பதிவு எண் கொண்ட பைக்கை ஒரு நபர் குண்டு வெடிப்பதற்கு 11 நிமிடங்களுக்கு முன் பாஜக அலுவலகத்துக்கு வெளியே பார்க் செய்தது அந்த அலுவலகத்தின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த குண்டுவெடிப்பில் 500 கிராம் வெடிமருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த குண்டுவெடிப்பையடுத்து டெல்லியில் இருந்து கருப்புப் பூனைப் படை எனப்படும் தேசிய பாதுகாப்புப் படையினர் பெங்களூர் விரைந்துள்ளனர்.
நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த குண்டுவெடிப்பில் இந்தியன் முஜாகிதீனுக்குத் தொடர்பிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் போலீஸ் உஷார் நிலை:
பெங்களூர் குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகள் கூட்டம் இன்று நடந்தது. இதில் மக்கள் கூடும் இடங்கள், கோயில்களுக்கு போலீஸ் பாதுகாப்பை அதிகரிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.