குஜராத் போலவே கர்நாடக மக்களும் மீண்டும் பாஜகவுக்கே வாக்களிப்பர்: நரேந்திர மோடி
மே 5ம் தேதி நடக்கவுள்ள கர்நாடக சட்டமன்றத் தேர்தலையொட்டி இன்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பெங்களூரில் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசினார். இன்று மாலை பசவனகுடி நேசனல் காலேஜ் மைதானத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அவர்,
கர்நாடகத்தை யாருடைய கையில் ஒப்படைக்கப் போகிறீர்கள். கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்று பாஜக தலைவர்கள் மீண்டும் மீண்டும் கேட்டுவிட்டார்கள். கேட்டால் கையை மட்டும் காட்டுகிறார்கள். முகத்தையும் காட்டுங்களேன். அது யாருடைய கையாக இருக்கப் போகிறதோ, எதை அழிக்கப் போகிறதோ தெரியவில்லை.
கர்நாடகத்தில் கடந்த 9 மாதங்களாக மிகச் சிறந்த ஆட்சியைத் தந்துள்ளார் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டார். கர்நாடகத்திலும் குஜராத்திலும் பாஜகவுக்கு ஒரே மாதிரியான பிரச்சனைகள் இருந்தன. ஆனாலும் நல்லாட்சியைத் தருவதில் இருந்து எங்களை யாராலும் தடுக்க முடியவில்லை.
நாங்கள் குஜராத்தில் 1995ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தோம். வேறுபாடுகளை கையாளும் அனுபவம் அப்போது எங்களுக்கு இல்லை. ஆனாலும் சிறந்த ஆட்சியைத் தந்ததால் மக்கள் எங்களுக்கே மீண்டும் வாக்களித்தனர். தொடர்ந்து 12 ஆண்டுகளாக எங்களை ஆட்சியில் அமர வைத்துள்ளனர்.
குஜராத் வாக்காளர்கள் போலவே கர்நாடக வாக்காளர்களும் மீண்டும் பாஜகவுக்கே வாக்களிப்பர்.
டெல்லியில் தான் நாடாளுமன்றம் இருக்கிறது, உச்ச நீதிமன்றம் இருக்கிறது. சிபிஐயும் இருக்கிறது. ஆனால், டெல்லியில் யாருக்காவது பாதுகாப்பு இருக்கிறதா. டெல்லியையே சரியாக நிர்வகிக்காத காங்கிரசால் கர்நாடகத்தை எப்படி சரியாக நிர்வகித்துவிட முடியும்?.
காங்கிரஸை யாராவது நம்ப முடியுமா.. ஒரு குடும்பத்தில் உங்கள் மகளைக் கட்டித் தருகிறீர்கள். அங்கு அந்த மகளை அந்தக் குடும்பம் சரியாக கவனிக்கவில்லை, சரியாக வாழ வைக்கவில்லை என்றால் அடுத்த மகளையும் அந்தக் குடும்பத்தில் நீங்கள் கட்டித் தருவீர்களா.. நிச்சயம் மாட்டீர்கள். அதுமாதிரி தான் காங்கிரசுக்கு மக்கள் மீண்டும் வாக்களிக்கப் போவதில்லை.
அதிகாரம் என்பதும் விஷம் மாதிரி என்று ஜெய்ப்பூர் மாநாட்டில் பேசிய சோனியா காந்தி ராகுல் காந்தியிடம் கூறினார். ஆனால், அதே மகன் இப்போது கர்நாடகத்தில் தனக்கு அதிகாரம் தருமாறு கேட்கிறார்.
சொன்னது எதையுமே காங்கிரஸ் செய்தது இல்லை. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் விலைவாசியைக் குறைப்போம் என்றார்கள். விலைவாசி குறைந்ததா?.
பெங்களூரில் இருந்து சமீபத்தில் வட கிழக்கு மாநிலத்தவர்கள் விரட்டியடிக்கப்பட்ட துரதிஷ்டவசமான சம்பவம் நடந்தது. ஆனால், அந்த விவகாரத்தை கர்நாடக பாஜக அரசு மிகச் சிறப்பாக கையாண்டது. அமைச்சர் அசோக் நேரடியாக அஸ்ஸாமுக்கே சென்று அந்த மக்களுக்கு பாதுகாப்பு தருவதாக உத்தரவாதம் தந்தார். இந்தியாவிலேயே மதவாதம் மிகுந்த கட்சி காங்கிரஸ் தான். மக்களைப் பிரித்து அதிகாரத்தைக் கைப்பற்றும் கட்சி அது. சகோதரர்களாக வாழும் மக்கள் ஒருவருடன் ஒருவர் மோதிக் கொள்ள வேண்டும் என்பது தான் காங்கிரசின் கொள்கை.
நாட்டின் எதிர்காலம் இளைஞர்களிடமும் கர்நாடக தேர்தலிலும் தான் இருக்கிறது.
இந்த மாநில மக்கள் மீண்டும் பாஜகவுக்கு மீண்டும் வாய்ப்பைத் தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. வரும் 5ம் தேதி மீண்டும் தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள். கைக்கு வாக்களித்துவிடாதீர்கள். உங்கள் வாக்கு இந்த நாட்டின் எதிர்காலத்துக்கு மிக அவசியம். உங்கள் ஓட்டு வளர்ச்சிக்கான ஓட்டாக இருக்கட்டும் என்றார் மோடி.