தமிழகத்திலேயே முதல்முறையாக திருநங்கைக்கு அரசு பணி
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கைக்கு அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பாதுகாப்பு பணி வழங்கப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த திருநங்கை குணவதி (வயது 23). இவர் எம்.ஏ.(ஆங்கிலம்) முதுகலை பட்டப் படிப்பு மற்றும் கணிப் பொறி ஆசிரியர் பயிற்சி படித்துள்ளார்.
முதுகலை பட்டம் பெற்று இருந்தாலும், குணவதி திருநங்கையாக இருந்ததால் பல நிறுவனங்களில் வேலை தர மறுத்தனர். எனவே தனக்கு அரசு பணி வழங்கவேண்டும் என்று கடந்த 2011ம் ஆண்டு முதல் அவர் மனு கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த மாதம் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வேலை கேட்டு திருநங்கை குணவதி மனு ஒன்றை கலெக்டர் வெங்கடாசலத்திடம் கொடுத்தார். அந்த மனுவை பரிசீலனை செய்து மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனருக்கு கலெக்டர் பரிந்துரை செய்தார். அதன்படி மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சுப்பிரமணி அந்த மனுவை ஆய்வு செய்தார்.
இதை தொடர்ந்து திருநங்கை குணவதிக்கு திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் ஒருங்கிணைந்த குழந்தைகள், சிசு பராமரிப்பு மையத்தில் காவலாளி பணி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிநியமன ஆணையை திருநங்கை குணவதியிடம் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சுப்பிரமணி வழங்கினார்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, மாவட்ட கலெக்டர் பரிந்துரையின் பேரில் திருநங்கை குணவதிக்கு காவலாளி பணி வழங்கப்பட்டு உள்ளது. அவர் குழந்தைகள், சிசு பராமரிப்பு மையத்தில் குழந்தைகள் திருட்டு நடைபெறாமல் இருப்பதை தடுப்பதற்கு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளார். அவருக்கு தேசிய சுகாதார ஊரக வளர்ச்சி திட்டத்தில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டு மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்பட இருக்கிறது. மேலும் அவருக்கு சீருடை, அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.
காலை, மதியம், இரவு என்று 3 நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தில் பணிபுரிய வேண்டும். மாவட்டத்தில் முதன் முறையாக திருநங்கைக்கு பணி வழங்கப்பட்டு இருக்கிறது என்றார்.
இந்த பணியில் சேர்ந்த திருநங்கை குணவதியிடம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருநங்கையாக இருப்பவர்களை பலர் ஒதுக்கி வருகின்றனர். ஆனால் எனக்கு இந்த பணியை வழங்கிய மாவட்ட கலெக்டருக்கும், நலப்பணிகள் இணை இயக்குனருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய கல்வி தகுதிக்கு ஏற்ற பணியாக இல்லை என்றாலும், பரவாயில்லை என்று சேர்ந்து விட்டேன் என்றார் குணவதி.