ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்ட சாத்தான்குளம் தாசில்தார் கைது
தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே குளத்தில் மண் அள்ளும் காண்ராக்ட் வழங்க ரூ.1லட்சம் கேட்ட தாசில்தாரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி டூவிபுரம் 5வது தெருவை சேர்ந்தவர் குமார். சாத்தான்குளம் தாசில்தாராக உள்ளார். புதுக்கோட்டை குலையன் கரிசலை சேர்ந்த குமரகுருபரன். அரசு அனுமதி பெற்ற காண்டிரக்டரான இவர் சாத்தான்குளம் அருகே உள்ள சாஸ்தாவி நல்லூர் உடைபரப்பு கிராமத்தில் மண் அள்ளுவதற்கான ஓப்பந்தத்தை பெற வேண்டி தூத்துக்குடி சுரங்க துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்திருந்தார்.
இவரது விண்ணப்பம் சாத்தான்குளம் தாசில்தாருக்கு அனுப்பப்பட்டது. இந்த மனுவை பரீசிலனை செய்ய ரூ.1 லட்சம் தர வேண்டும் என தாசில்தார் குமார் கேட்டுள்ளார்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத குமரகுருபரன் தூத்துக்குடி லஞ்ச ஓழிப்பு துறை டிஎஸ்பி ஸ்டிபன் ஜேசுபாதததிடம் புகார் செய்தார். அவரின் ஆலோசனைப்படி டூவிபுரம் 5வது தெருவில் உள்ள தாசில்தார் குமார் வீட்டுக்கு சென்றார். அங்கு லஞ்ச ஓழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.50 ஆயிரத்தை முதல் தவணையாக குமாரிடம் கொடுத்தார். இதனை மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஓழிப்பு துறை போலீசார் தாசில்தார் குமாரை கையும் களவுமாக பிடித்தனர். மேலும் அவரது வீட்டில் சோதனை நடத்தினர். கைது செய்யப்பட்ட குமாரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர் வரும் ஜூலை 31ம் தேதி ஓய்வு பெற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.