மீனவர் பிரச்சனையில் பிரதமருக்கு கடிதம் எழுதுவதோடு கடமை முடிந்துவிட்டதாக ஜெ. திருப்தி: ராமதாஸ்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
வங்கக் கடலில் மீன் பிடிக்கச் சென்ற நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 65 மீனவர்களை செவ்வாய்க்கிழமை இரவு சிங்களப் படையினர் கைது செய்துள்ளனர். இந்தத் தகவல் வந்து சேருவதற்கு முன்பாகவே கோடியக்காடு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மேலும் 74 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் இலங்கையில் யாழ்ப்பாணம், திரிகோணமலை உள்ளிட்ட இடங்களில் உள்ள நீதிமன்றங்களில் நேர் நிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்தாலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்வதும் சிங்களப்படையினரின் வாடிக்கையாகி வருகிறது. கடந்த இரு நாட்களுக்கு முன் தமிழக மீனவர்களை சிங்கள மீனவர்களும், சிங்கள கடற்படையினரும் கொடூரமான முறையில் தாக்கியதால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகுவதற்கு முன்பே மொத்தம் 139 மீனவர்களை இலங்கை கடற்படை எல்லை தாண்டி வந்து கைது செய்துள்ளது. இந்திய எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது தான் மீனவர்களை சிங்களப் படையினர் பிடித்துச் சென்றுள்ளனர் என்பதால், இதை கைதாக கருதாமல் கடத்தலாக கருத வேண்டும்.
தமிழக மீனவர்களுக்கு எதிரான சிங்களப் படையினரின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த பயனும் ஏற்படவில்லை. கடந்த 2 மாதங்களில் மட்டும் 10 முறை தமிழக மீனவர்கள் சிங்களப் படையினரால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே, இலங்கை சிறையில் வாடும் 26 மீனவர்களை விடுவிக்க மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கைகள் தோல்வியடைந்து விட்டன. இதனால் தங்களின் எதிர்காலம் என்ன ஆகுமோ? என்ற அச்சத்தில் மீனவர்கள் உறைந்துள்ளனர். கடத்தப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் வருவாய் இல்லாமல் வறுமையில் வாடுகின்றனர். எனவே, இப்போது கைது செய்யப்படுள்ள மீனவர்கள் 139 பேரையும், ஏற்கனவே இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களையும் உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டிய முதலமைச்சரோ, மீனவர்கள் தாக்கப்படும்போதெல்லாம் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதுவதுடன் தமது கடமை முடிந்து விட்டதாக கருதி திருப்தியடைந்து கொள்கிறார்.
மத்திய அரசோ தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை ஒரு பிரச்சினையாகவே பார்ப்பதற்கு தயாராக இல்லை. தமிழக அரசு துணிச்சலான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமாகவே இப்பிரச்சினைக்கு முடிவு கட்ட இயலும். இந்திய எல்லைக்குள் நுழைந்து தமிழக மீனவர்களை தாக்குவதும், கடத்துவதும் சட்ட விரோதமானவை என்பதால் இவற்றுக்கு காரணமான இலங்கப் படையின் அதிகாரிகள் மீது தமிழக காவல்நிலையங்களில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அதனடிப்படையில் இண்டர்போல் உதவியுடன் இலங்கைப் படையினரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் சிங்களப் படையினரின் அட்டகாசத்தை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்பதால் அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.