முல்லைப் பெரியாறு.. தமிழகத்துக்கு ஆதரவாக மத்திய நீர்வள ஆணையம்: கேரளா புகார்
டெல்லி: முல்லைப் பெரியாறு அணை வழக்கில் மத்திய நீர்வள ஆணையம் தமிழகத்துக்கு ஆதரவாக செயல்படுவதாக கேரளா புகார் கூறியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை வழக்கில் தீர்ப்பை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்த மாதம் ஒத்திவைத்தது. அப்போது, தீர்ப்பு வழங்கும் முன்பாக தமிழக கேரள அரசுகளுக்கு ஏதேனும் ஆட்சேபங்கள் அல்லது கருத்துகள் தெரிவிக்க வேண்டியிருந்தால் அதை எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக அரசு தமது கருத்தை எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்தது. இதேபோல, கேரள அரசு நேற்று உச்சநீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது.
அதில், முல்லைப் பெரியாறு அணை பகுதியில் 71.17 செ.மீ., 39.21 செ.மீ., 47.75 செ.மீ. அளவுகளில் மழை பெய்தால் விநாடிக்கு 2.12 லட்சம் கன அடி வெள்ள நீர் வரும் என்று மத்திய நீர்வள ஆணையத்தின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அணைப் பகுதியில் மூன்று அளவுகளில் மழை பெய்தால் சீரான அளவில் வெள்ள நீர் எப்படி வெளியாகும்? இதன் மூலம் தமிழக நலனுக்கு ஆதரவாக மத்திய நீர் ஆணையம் செயல்பட்டுள்ளது. மேலும் அணை பலவீனமடையும் என்பது சாத்தியமான விஷயமே என்று கூறப்பட்டுள்ளது.