அத்வானி கோஷ்டி முட்டுக்கட்டை! எதிர்ப்பை மீறி பிரதமர் வேட்பாளராகும் மோடி!!
பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநில முதல்வர்களில் ஒருவரான இருந்தவர் நரேந்திர மோடி. ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களாக வலம் வந்தவர்கள் எல்.கே.அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ் போன்றோர். கடந்த சில ஆண்டுகளாக நரேந்திர மோடியின் விஸ்வரூபமானது அவரை பாரதிய ஜனதா கட்சியின் தலைமை நிர்வாகிகளில் ஒருவர் என்ற நிலைக்கு உயர்த்தியது.
ராஜ்நாத்சிங், பாஜகவின் தலைவரான பின்னர் மோடி கட்சியின் நாடாளுமன்ற குழுவில் இடம்பெற்றார். பின்னர் கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையே லோக்சபா தேர்தலுக்கான பிரசாரக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் மோடிதான் பாஜகவின் பிரதமர் வேட்பாளரும் கூட என்று சொல்லப்படுவதை அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ் வகையறாக்களால் ஜீரணிக்க முடியவில்லை.
நீடித்துக் கொண்டே செல்லும் இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வந்ததுதான் நவம்பர் மாதம் நடைபெற உள்ள 5 மாநில சட்டசபை தேர்தல். மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், டெல்லி, ராஜஸ்தான் மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாகவே நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து அவர் தலைமையிலேயே தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்று பாஜக தலைவர் ராஜ்நாத்சிங், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் எண்ணம்.
ஆனால் ஏன் இப்போது இவ்வளவு அவசரம்? சட்டசபை தேர்தல்கள் முடிவடைந்த பின்னர் பார்த்துக் கொள்ளலாமே என்பது அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ் அணியினரின் பிடிவாதம். இதனாலேயே கடந்த 2 நாட்களாக டெல்லியில் நடைபெற்ற பாஜக, ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் 13 சார்பு இயக்கங்களின் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் அத்வானி, சுஷ்மா அணியினர் மோடியை உடனே பிரதமர் வேட்பாளராக அறிவிக்க எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனாலும் கூட மோடியையே பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது என ஒருமித்த முடிவெடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
வரும் 13 முதல் 19-ந் தேதி வரையில் பாஜகவின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் கூடி இறுதி முடிவை அறிவிக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.