போலீஸ் கன்னத்தில் பளார் விட்ட பாஜக Ex எம்.எல்.ஏ... கட்சித் தொண்டர் என நினைத்துவிட்டதாக விளக்கம்..!
பெங்களூரு: கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் போலீஸ் ஏட்டு ஒருவர் கன்னத்தில் பாஜா முக்கிய நிர்வாகியான பாபாரெட்டி பளார் விட்ட நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவை கண்டித்து அவரது உருவப்படங்களை எரித்து பாஜக எஸ்.சி. மோர்ச்சா பிரிவு நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு ரய்ச்சூர் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. பாபாரெட்டி தலைமைதாங்கினார்.

அப்போது காவல் உடை அணியாத மஃப்டி காவலர் ஒருவர், சித்தராமையா உருவப்படங்களை எரிக்கவிடாமல் பாஜகவினரை தடுத்துக்கொண்டிருந்தார். இதனைப் பார்த்துவிட்டு அவர் அருகில் சென்ற பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. பாபாரெட்டி ஓங்கி காவலர் ராகவேந்திரா கன்னத்தில் பளார் விட்டார்.
இதையடுத்து இந்த விவகாரம் சர்ச்சையானதை அடுத்து இது குறித்து விளக்கம் அளித்துள்ள பாஜக நிர்வாகி பாபாரெட்டி , போலீஸ் உடையில் இல்லாததால் காவலர் ராகவேந்திராவை தனது கட்சித் தொண்டர் என நினைத்து அடித்துவிட்டதாகவும் காங்கிரஸ்காரர்கள் எத்தனையோ முறை பிரதமர் மோடியின் உருவப்படத்தையும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் உருவப்படத்தையும் தீயிட்டு எரித்துள்ளதாகவும் ஆனால் அப்போதெல்லாம் அவர்களை போலீஸ் தடுத்து நிறுத்தாது ஏன் எனவும் வினவினார்.
கட்சித் தொண்டர் என நினைத்து அடித்துவிட்டேன் என கூறினாரே தவிர கன்னத்தில் அடித்ததற்காக பாபாரெட்டி ஒரு போதும் வருத்தம் தெரிவிக்கவில்லை. இதனிடையே இந்த நிகழ்வு குறித்து பேட்டியளித்துள்ள ரய்ச்சூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிகில், போலீஸ் ஏட்டை தாக்கிய பாஜக நிர்வாகி பாபாரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட காவலரை தாம் நேரில் சந்தித்து பேசிய பிறகு மேற்கொண்டு தகவல் கூறுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications