ஹிஜாப் அணிய அனுமதி கேட்டு ஆஜராகும் வக்கீல் காங்கிரஸ் பிரமுகர்: பாஜக குற்றச்சாட்டு! வழக்கறிஞர் பதிலடி
பெங்களூரு: ‛‛அதிர்ஷ்டவசமாக நான் சுதந்திர நாட்டில் வாழ்கிறேன்.நான் எந்த வழக்கில் வேண்டுமானாலும் ஆஜராகி வாதாடுவேன். இதுகுறித்து எந்த அரசியல் கட்சிகளும் என்னிடம் கேள்வி கேட்க முடியாது'' என ஹிஜாப் தடையை எதிர்க்கும் வழக்கில் மனுதார் தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர் தேவுதத் காமத், பாஜகவுக்கு காட்டமாக பதிலளித்தார்.
உடுப்பி மகாத்மா காந்தி நினைவு கல்லுாரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து சென்றனர். இதையடுத்து ஹிந்து ஜகரானா வேதிகே அமைப்பை சேர்ந்த சில மாணவிகள் காவி ஷால் அணிந்து கல்லூரிக்குள் நுழைந்தனர்.
ஹிஜாப் அணிந்துள்ள மாணவிகளிடம் அதை அகற்ற கோரிக்கை வைத்தனர். கல்லூரி முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து மாணவிகள் ஹிஜாப்பை அகற்றினர். இதன் தொடர்ச்சியாக பல இடங்களில் சர்ச்சை உருவானது. குந்தாப்புரா அரசு பி.யூ. கல்லுாரி, பைந்துார் அரசு ஜூனியர் கல்லுரியிலும் ஹிஜாப், காவி ஷால் அணிதல் தொடர்பான பிரச்னை ஏற்பட்டது.

சர்ச்சையாக மாறியது
மேலும் பல இடங்களில் ஹிஜாப் அணியும் மாணவிகளுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அமைப்பினர், கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிக்கமகளூரு, மண்டியா, சிவமொக்கா, பாகல்கோட்டை உள்பட பிற மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் போட்டி போராட்டம் நடத்தினர். சிவமொக்கா, பாகல்கோட்டையில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. இதையடுத்து 3 நாட்கள் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. கர்நாடகத்தில் நடந்த ஹிஜாப், காவி ஷால் போராட்டம் இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஐகோர்ட்டில் விசாரணை
சில கல்லூரிகளில் ‛ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வரலாம். ஆனால் வகுப்பறையில் அகற்ற வேண்டும்' என வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாக கூறப்படுகிறது. ஹிஜாப் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து உடுப்பியை சேர்ந்த மாணவிகள் தொடர்ந்த வழக்கு பெங்களூரில் உள்ள கர்நாடக ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி கிருஷ்ணா தீக்சித் விசாரித்தார். அப்போது அவர், ‛‛பகுத்தறிவு, சட்டத்தின் வழியே இதை அணுகுவோம். அரசிலமைப்பு சட்டம் தான் எனக்கு பகவத் கீதை. நான் அரசியலமைப்பு சட்டத்தின் மீது உறுதிமொழி எடுத்துள்ளேன். உணர்ச்சிகளை ஓரம்கட்டிவிட்டு அரசியலமைப்பு சொல்வது போல் நடந்து கொள்ள வேண்டும். '' எனக்கூறினார்.

பாஜக விமர்சனம்
மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் தேவுதத் காமத், அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பிரபுலிங் கே.நாவடி வாதாடினர். தேவுதத் காமத் வெவ்வேறு கோர்ட்டுகளின் தீர்ப்புகளை மேற்கொள் காட்டி ஹிஜாப் அணியும் மாணவிகளுக்கு ஆதரவாக பல்வேறு அம்சங்களை வாதங்களாக முன்வைத்தார்.
இந்நிலையில் கர்நாடக பாஜகவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிடப்பட்டது. அதில், ‛‛நாங்கள் கூறுவது என்னவெனில், ஹிஜாப் சர்ச்சைக்கு பின்னால் காங்கிரஸ் உள்ளது. ஹிஜாப் தொடர்பான வழக்கில் ஐகோர்ட்டில் வாதாடுபவர் காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவில் அங்கம் வகிக்கும் பிரதிநிதி. சமுதாயத்தை பிளவுப்படுத்தும் செயலில் காங்கிரஸ் ஈடுபடுவதற்கு இதை விட சிறந்த உதாரணம் வேறு எதுவும் இல்லை'' என குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் உத்தர பிரதேச தேர்தலுக்கான சட்ட ஒருங்கிணைப்பு கமிட்டியின் தலைவராக காங்கிரஸ் சார்பில் தேவுதத் காமத் தலைவராக நியமித்து காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் வேணுகோபால் வெளியிட்ட கடிதத்தையும் பாஜக வெளியிட்டு இருந்தது.
Recommended Video

பதிலடி
இதற்கு தேவுதத் காமத் டுவிட்டரில் பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛அதிர்ஷ்டவசமாக நான் சுதந்திர நாட்டில் வாழ்கிறேன். வழக்கறிஞராக நான் எந்த வழக்கில் வேண்டுமானாலும் ஆஜராகி வாதாடுவேன். இதுகுறித்து எந்த அரசியல் கட்சிகளும் என்னிடம் கேள்வி கேட்க முடியாது'' என காட்டமாக பதிலளித்து இருந்தார்.












Click it and Unblock the Notifications