மோடியின் பண ஒழிப்பால் பாதிப்பு.... 2018ல் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.75- 7.5 சதவீதமே!
டெல்லி: பிரதமர் மோடி அறிவித்த பண ஒழிப்புத் திட்டத்தால் நாட்டின் மொத்த உற்பத்தி எதிர்ப்பார்த்ததை விட குறைவாக இருக்கும். அதாவது 6.75 சதவீதத்திலிருந்து 7.5 சதவீதமாக இருக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண ஒழிப்பு மட்டுமல்ல, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வும் வரும் ஆண்டுகளில் ஜிடிபியை பாதிக்கும் என்கிறது இந்த ஆய்வறிக்கை.
இந்த ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியம் மக்களவையில் இன்று சமர்ப்பித்தார்.
அந்த அறிக்கையில், வரும் 2018-ம் ஆண்டில் நாட்டின் மொத்த உற்பத்தி (ஜிடிபி) 6.75லிருந்து 7.5 சதவீத்துக்குள் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது 2017-ம் ஆண்டைவிட இது 0.75 சதவீதம் குறைவாகும்.
முன்னதாக மத்திய புள்ளியியல் நிறுவனம், 2016-17-ம் ஆண்டில் நாட்டின் மொத்த உற்பத்தி 7.1 சதவீதமாக இருக்கும் என கணித்திருந்தது. ஆனால் பண ஒழிப்பு நடவடிக்கையின் பாதிப்பை அது கணக்கில் கொள்ளவில்லை.
பண ஒழிப்பு நடவடிக்கையின் பாதிப்பு, 2016-17-க்கான மொத்த உற்பத்தியில் 0.25 சதவீதத்திலிருந்து 0.50 சதவீதம் வரை இருக்கும் என மற்ற பொருளாதார அமைப்புகள் கணித்துள்ளன.
இந்த ஆண்டு இறுதிக்குள் பண சுழற்சி இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும் என்றும், அதன் பின்னரே 2017 - 2018-ம் ஆண்டுக்கான வளர்ச்சி விகிதம் பற்றி சரியாகக் கணிக்க முடியும் என்றும் இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆக பண ஒழிப்பு நடவடிக்கையால் மொத்த உற்பத்தி விகிதத்தில் பாதிப்பு ஏற்படும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முன்பு கூறியது நிஜமாகியுள்ளது.
மோடியின் பண ஒழிப்பு நடப்பு ஆண்டு ஜிடிபியை மட்டுமல்ல, அடுத்த ஆண்டுக்கான ஜிடிபி வளர்ச்சியையும் பாதித்துள்ளதை அரசின் பொருளாதார ஆய்வறிக்கையே அம்பலப்படுத்தியுள்ளது.