தேர்தல் தோல்வி பயத்தால் அதிகரித்த மானிய சிலிண்டர்கள்… குழப்பம் அதிகரிப்பு
சென்னை: குடும்பத்திற்கு ஓராண்டுக்கு வழங்கப்படும் மானிய சிலிண்டர்களின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி இனி ஆண்டுக்கு 12 சிலிண்டர்களை பெற்றுக்கொள்ளலாம். சிலிண்டர் தீர்ந்து போய்விடுமோ... அதிக விலைகொடுத்து வாங்க வேண்டியிருக்குமோ என்ற அச்சப்படத் தேவையில்லை.
சிலிண்டர்களின் எண்ணிக்கை கூடினாலும் கூடவே பயனாளிகள் மத்தியில் குழப்பமும் அதிகரித்துள்ளது என்கின்றனர்.
ஆண்டுக்கு 6 சிலிண்டர்தான்….
வீடுகளுக்கு மானிய விலையில் சமையல் காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படுவதில் மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன் கட்டுப்பாடு கொண்டு வந்தது. 2012, செப்டம்பர் முதல் ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்பட்டன.
சிலிண்டர் கணக்கீட்டில் குழப்பம்
குடும்பத்திற்கு ஓராண்டுக்கு 6 மானிய சிலிண்டர்களே வழங்கப்படும் என 2012 செப்டம்பர் 14 ஆம் தேதி வெளியான அறிவிப்பின்படி, 2012 (ஏப்ரல்-செப்டம்பர்) வரையிலான காலத்திற்கு 3 சிலிண்டர்களும், செப்டம்பர் - மார்ச் 2013 வரையிலான அடுத்த அரையாண்டு காலத்திற்கு 3 சிலிண்டர்களும் என மொத்தம் 6 என கணக்கில் கொள்ளப்பட்டது.
அந்த வகையில், 2012 செப்டம்பர் - மார்ச் 2013 வரையிலான காலத்தில் வாடிக்கையாளர்கள் மானிய சிலிண்டர்கள் 3 மட்டுமே பெற முடியும் என்று இருந்தது.
அதிக விலையில் சிலிண்டர்கள்
4, 5-ஆவது என அடுத்தடுத்து பெறும் சிலிண்டர்களை மானியம் அல்லாத விலையில் ரூ.936 (டெலிவரி சார்ஜ் தனி) பெறும் நிலை ஏற்பட்டது.இந்த சிலிண்டர் கணக்கீடு பெரும்பாலான வாடிக்கையாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது.
9 ஆக உயர்ந்த சிலிண்டர்கள்…
இது மக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியது. எதிர்கட்சியினரின் போராட்டத்திற்குப் பின்னர், 2013ம் ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதியன்று குடும்பத்திற்கு ஓராண்டுக்கு வழங்கப்படும் மானிய சிலிண்டர்களின் எண்ணிக்கையை 6ல் இருந்து 9 ஆக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டது.
கும்மியடித்த குழப்பம்
குடும்பத்திற்கு ஓராண்டுக்கு வழங்கப்படும் மானிய சிலிண்டர்களின் எண்ணிக்கையை 6ல் இருந்து 9 ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்ட போது வாடிக்கையாளர்களுக்கும், கேஸ் விநியோகஸ்தர்களுக்கும் இடையே குழப்பமும், பிரச்சினையும் வெடித்தது.
பணம் திரும்ப கிடைக்குமா?
மானிய சிலிண்டர் அதிகரிப்பு தகவல்கள் வெளியான நிலையில், சில வாடிக்கையாளர்கள் மானியம் அல்லாத விலையில் சிலிண்டர் பதிவு செய்து டெலிவரி எடுத்திருந்தனர். அவர்கள் கேஸ் விநியோகஸ்தர்களை அணுகி மீதி ரூ.500-ஐ திரும்ப தரக்கோரி வாக்குவாதம் செய்யும் நிலையும் ஏற்பட்டது.
தேர்தலில் தோல்வி
இந்த குழப்பமும் சிக்கலும்தான் காங்கிரஸ் கட்சிக்கு 4 மாநில சட்டசபை தேர்தலில் அடி விழ காரணமாக அமைந்தது. இந்த தேர்தல் தோல்விக்கு பிறகு, காங்கிரஸ் அமைச்சர்கள் 2 வாரங்களுக்கு முன்னதாக மானிய சிலிண்டர் எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். சிலிண்டர்களின் எண்ணிக்கையை உயர்த்தினால் மட்டுமே நாடாளுமன்ற மக்களவைத்தேர்தலில் வெற்றியை எதிர்பார்க்க முடியும் என்றும் அமைச்சர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.
சிலிண்டர்களை அதிகரிக்க
வீட்டு உபயோக சிலிண்டர்களின் எண்ணிக்கையை மேலும் உயர்த்த வேண்டும் என்று காங்கிரஸ் மட்டுமின்றி, பல்வேறு எதிர்க்கட்சிகளும் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
ராகுல்காந்தி எபெக்ட்
அதே சமயம் வீடுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் சமையல் காஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை உயர்த்தும்படி ராகுல் காந்தி கேட்டுக் கொண்ட சில நிமிடத்தில், 12 சிலிண்டர்கள் வழங்குவதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
அதன்படி வீட்டு உபயோகத்திற்கு விநியோகம் செய்யப்படும் மானியவிலை சிலிண்டர்களின் எண்ணிக்கை இன்று முதல் 12 ஆக வழங்கப்படும் என அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதிலும் குழப்பம் வருமா?
9 சிலிண்டர் முடிந்து 10 வது சிலிண்டருக்கு புக் செய்தவர்களுக்கு மானிய விலையில் கிடைக்குமா? மானியமல்லாத விலையில்தான் சிலிண்டர் வாங்கவேண்டுமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
97 சதவிகித மக்கள்
மானிய விலையில் ஒரு சிலிண்டர் ரூ.398 க்கு சென்னையில் வழங்கப்படுகிறது. டோர் டெலிவரியோடு சேர்த்து 425 ரூபாய் ஆகிறது. தற்போது 89.2 சதவீதம் அதாவது 15 கோடி பேர், ஆண்டுக்கு 9 சிலிண்டரை பெற்று வருகின்றனர். 12 சிலிண்டர் வழங்கப்படும் போது 97% பேர் பயன்பெறுவர்.
வெறும் 10 சதவிகிதம்தான்
மானிய விலையில் பெறப்படும் காஸ் சிலிண்டர் போதாத நிலையில், 10 சதவீதம் பேர் மட்டுமே சந்தை விலையில் தங்களின் தேவைக்கான சிலிண்டர்களை வாங்குகின்றனர்.
ஆதார்கார்டு குழப்பம்
சிலிண்டர்களின் எண்ணிக்கையைப் போல எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியத்தை நேரடியாக பயனாளிகளுக்கு வழங்கும் மாவட்டங்களில் இதை விட அதிக குழப்பமாக உள்ளது. அதை விலை கொடுத்து சிலிண்டரை வாங்கிவிட்டு ஆதார் எண் படி அதை வங்கியில் பணத்தை எடுத்துக்கொள்ளும் நடைமுறை பயனாளிகளை பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது. அதையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்துவிட்டார் அமைச்சர் வீரப்ப மொய்லி.
ஏன் இத்தனை குழப்பம்
5 ஆண்டுகளுக்கு முன்பு வரை சமையல் எரிவாயு சிலிண்டர்கள் புக் செய்த உடன் வீட்டிற்கு வந்து விடும். பின்னர் 26 நாட்களுக்கு ஒருமுறைதான் புக் செய்யவேண்டும் என்று நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் எத்தனை சிலிண்டர்கள் வேண்டுமானாலும் மானிய விலையில் புக் செய்யலாம். 2012ம் ஆண்டில் 6 ஆக கட்டுப்படுத்தப்பட்டு பின்னர் 9 ஆக மாறி இப்போது 12 என வந்துள்ளது.
தேர்தலில் கைகொடுக்குமா?
மாதம் ஒன்றிர்கு ஒரு சிலிண்டர் என்பது சரியான நடைமுறைதான் என்றாலும் தேர்தல் தோல்வி பயம் ஏற்பட்ட பின்னர்தான் இதை அமல்படுத்த வேண்டுமா என்று கேட்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.ராகுல்காந்தி எபெக்ட் நாடாளுமன்றத்தேர்தலில்தான் தெரியவரும்.