திமுகவில் ஆ.ராசா மற்றும் பொன்முடிக்கு முக்கியப் பதவி... 2 பேருக்காக சட்டதிட்ட விதிகளில் திருத்தம்..!
சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளர்களாக ஆ.ராசா மற்றும் பொன்முடி ஆகிய இருவரும் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
திமுக சட்டதிட்ட விதி 17(3) படி அவர்கள் இருவரும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து திமுக துணைப் பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கை 3-ல் இருந்து 5 ஆக அதிகரித்துள்ளது.
திமுக பொதுக்குழு சுவாரஸ்யம்... துரைமுருகனுக்கு 218 பேர்.. டி.ஆர். பாலுவுக்கு 125 பேர்..!
3 பேர் உள்ளனர்
திமுக துணைப் பொதுச்செயலாளர்களாக சுப்புலட்சுமி ஜெகதீசன், ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ் ஆகிய மூவரும் உள்ள நிலையில் புதிதாக அந்த வரிசையில் புதிதாக இணைந்துள்ளனர் முன்னாள் அமைச்சர்கள் பொன்முடியும், ஆ.ராசாவும். பொதுக்குழுவில் திமுக சட்டதிட்ட விதியில் 5 பேர் துணை பொதுச்செயலாளர்களாக இருக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் இருவரது நியமனமும் அறிவிக்கப்பட்டது.
மாவட்டச் செயலாளர்
முன்னாள் அமைச்சர் பொன்முடியை பொறுத்தவரை துணைப் பொதுச்செயலாளர் பதவியை விரும்பவில்லை எனத் தெரிகிறது. இருந்தால் மாவட்டச் செயலாளராகவே இருந்துவிடுகிறேன் இல்லையென்றால் முதன்மைச் செயலாளராக ஆக்குமாறு தலைமையிடம் கோரிக்கை வைத்ததாகவும் ஆனால் அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அதிருப்தியில் இருந்த பொன்முடியை அவரது அகன் கவுதமசிகாமணி மூலம் சமாதானம் செய்து துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஸ்டாலின் வலியுறுத்தல்
முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவும் துணைப் பொதுச்செயலாளர் பதவியை எதிர்பார்க்கவில்லை என்றும் இருப்பினும் ஸ்டாலின் வலியுறுத்திய காரணத்தால் அந்தப் பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்ள முன்வந்ததாக கூறப்படுகிறது. கோட்டாவின் அடிப்படையில் தமக்கு பதவி வேண்டாம் என்றும் திறமையையும், செயல்பாட்டையும் வைத்து பதவி கொடுத்தால் அதை ஏற்றுக்கொள்கிறேன் எனவும் கூறி வந்தார் ஆர்.ராசா. இந்நிலையில் இன்று நடைபெற்ற பொதுக்குழுவில் துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்படுவதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
விரைவில் மாற்றம்
திமுக அமைப்பு ரீதியாக நிர்வாக பதவிகளில் இன்னும் ஒரு சில மாற்றங்கள் இருக்கக்கூடும் எனத் தெரிகிறது. சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து இந்த மாற்றங்கள் இருக்கும் எனக் கூறப்படுகிறது. திமுக வரலாற்றில் முதல்முறையாக காணொலி மூலம் பொதுக்குழுவை நடத்திக்காட்டியதுடன் 5 பேர் துணைப் பொதுச்செயலாளர்களாக இருக்கும் வகையில் சட்டதிட்ட விதிகளிலும் திருத்தம் செய்திருக்கிறார் ஸ்டாலின்.