போகி காற்று மாசு.. சென்னையில் 15 இடங்களில் கண்காணிக்க ஏற்பாடு.. மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி
சென்னை: கொண்டாடுவோம் கொண்டாடுவோம், புகையில்லா போகியை கொண்டாடுவோம், என்று கோரிக்கை விடுத்துள்ளது தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்.
நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டு வந்துள்ளனர். இச்செய்கையால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் இருந்து வந்துள்ளது.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் போகி பண்டிகையின் பொழுது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப்கள், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிக்கின்றனர். இம்மாதிரியான, பொருட்கள் போகி அன்று எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு அடர்ந்த புகை மற்றும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்கள் பொது மக்களுக்கு ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுகிறது.
மேலும் விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது. சென்னை நகரில் போகி அன்று எரிக்கப்படும் மேற்படி பொருட்களால் புகை மண்டலம் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது
இத்தகைய செயல்கள் பொது மக்களிடம் விழிப்புணர்வு இல்லாமையால் ஏற்பட்டு வந்தது. இதனை தவிர்க்க, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கடந்த 18 ஆண்டுகளாக போகிப்பண்டிகைக்கு முன் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றது. இதன் காரணமாக கடந்த வருடங்களில் பழைய ரப்பர் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் டயர், டியூப் போன்றவற்றை எரிப்பது பெரும்பாலும் குறைந்துள்ளது.
அதன் அடிப்படையில், இந்த ஆண்டும் சுற்றுச் சூழல் மாசு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை எற்படுத்தும் வகையில், சென்னை மாநகரம் மற்றும் அனைத்து மாவட்ட தலைமையிடங்களிலும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்டாலினின் செல்வாக்கை பார்த்து... வயிற்றெரிச்சலில் பிதற்றுகிறார் பொள்ளாச்சி ஜெயராமன் -ஆர்.எஸ்.பாரதி
போகிப்பண்டிகையின்போது சென்னை மாநகரத்தின் சுற்றுச்சூழல் காற்று மாசினை கண்காணிப்பு செய்யும் பொருட்டு, வாரியம் போகிப்பண்டிகையின் முந்தைய நாள் மற்றும் போகிப்ப்பண்டிகை நாளிலும் 15 இடங்களில் 24 மணி நேரமும் காற்றுத்தரத்தினை கண்காணிக்க காற்று மாதிரி சேகரிப்பு வசதி செய்துள்ளோம்.
கொண்டாடுவோம் கொண்டாடுவோம், புகையில்லா போகியை கொண்டாடுவோம். இவ்வாறு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.