பொங்கல் பரிசுத் தொகுப்பில் தேங்காய் கேட்ட பாஜக..மோடியை தரச்சொன்ன அமைச்சர் செஞ்சி மஸ்தான்
சென்னை: பொங்கல் பரிசாக பொதுமக்களுக்கு ரூ.1,000 ரொக்க பணம், ஒரு கிலோ பச்சரிசி, கரும்பு மற்றும் சக்கரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பில் தேங்காய் வழங்க வலியுறுத்தி தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மோடி வேண்டுமானால் தேங்காய் கொடுக்கட்டும் நாங்கள் அதனை வரவேற்கிறோம் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார்.
பொங்கல் பரிசாக பொதுமக்களுக்கு ரூ.1,000 ரொக்க பணம், ஒரு கிலோ பச்சரிசி, கரும்பு மற்றும் சக்கரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
பொங்கல் தொகுப்புடன் தேங்காயை மக்களுக்கு அரசு வழங்க வேண்டும். இல்லை என்றால், வரும் ஜனவரி முதல் வாரத்தில் தமிழக பா.ஜ.க. விவசாய அணி சார்பில் பொது மக்களுக்கு இலவசமாக தேங்காய் வழங்கும் போராட்டம் நடத்தவுள்ளோம் என பா.ஜ.க விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே நாகராஜ் கூறியிருந்தார். அதன்படி பொங்கல் பரிசுத்தொகுப்பில், கரும்பு போல் இலவசமாக தேங்காய் வழங்க கோரி திருச்சி நாகை மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரத்தில் பாஜக விவசாய அணி மாநிலப் பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவர் கலிவரதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடும் வகையில், பொங்கல் பரிசுத் தொகுப்பில் தேங்காய் வழங்க வேண்டும். விழுப்புரம் அடுத்த ஏனாதிமங்கலம் தென்பெண்ணையாற்று அரசு மணல் குவாரியை மூட வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.
தமிழகத்தில் தற்போது தேங்காய் எண்ணெய் மிகவும் வீழ்ச்சி அடைந்து விட்டதால் தேங்காய் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவே பொங்கல் பரிசு தொகுப்பில் ஸ்டேஷன் கடைகள் மூலமாக தேங்காய் வழங்க வேண்டும் சத்துணவு பாமாயில் சமைப்பதை விட்டுவிட்டு தேங்காய் எண்ணெயில் சமைத்து தேங்காயையும் உணவாக வழங்க வேண்டும் ரேஷன் கடைகள் மூலமாக பாமாயில் விற்பனை செய்வதை விடுத்து தேங்காய் எண்ணெய்களை விற்பனை செய்ய வேண்டும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை திலகர் பாஜக சார்பில் கண்டன போராட்டம் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பாஜகவினர் கைகளில் தேங்காய் வைத்துக்கொண்டு போராட்டம் செய்வதற்காக ஆட்டோவில் நூற்றுக்கணக்கான தேங்காய்களை ஏற்றி வந்தனர் இந்த ஆட்டோவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனால் காவல்துறைக்கும் பாஜக விளக்கம் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தேங்காயை திரும்ப ஒப்படைக்கவில்லை என்றால் மறியலில் ஈடுபடுவோம் என்று பாஜகவினர் கூறியதை அடுத்து காவல்துறையினர் தேங்காய் ஆட்டோவை விடுவித்து பாஜகவிடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து பாஜக சார்பில் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஒவ்வொருவரும் தங்களது கைகளில் தேங்காய் வைத்துக்கொண்டு கண்டன கோஷங்களை முழக்கங்களை எழுப்பினர்.
பொங்கல் பரிசாக தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்போடு ஒரு குடும்ப அட்டைக்கு 2 தேங்காய்கள் வீதம்
2 கோடியே 20 லட்சத்து 40 ஆயிரம் தேங்காய்கள் வழங்கினால் அதன் மூலம், 4 கோடியே 20 லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்களுக்கு தேங்காய்கள் தென்னை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கப்படும். எனவே பொங்கல் தொகுப்புடன் தேங்காய்களை தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
பள்ளி சிறுவர் சிறுமியர்களுக்கு மதிய உணவில் தேங்காய் சீவல், தேங்காய் பால் தர வேண்டும். தேங்காய் பாலில் தாய்பாலுக்கு இணையான சத்துக்கள் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதுடன் சிறந்த ஊட்டச்சத்தாகவும் விளங்குகின்றது. ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக விவசாய அணியினர் தெரிவித்தனர்.
இதனிடையே பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காய் வழங்கக் கோரி பாஜகவினர் ஆர்பாட்டம் செய்வது பற்றி அமைச்சர் செஞ்சி மாஸ்தானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், பிரதமர் மோடி வேண்டுமானால் பொங்கல் பரிசுடன் தேங்காய் வழங்கட்டும் அதை நாங்கள் வரவேற்கிறோம் என்றுகூறினார்.