மாணவிகளை வலுக்கட்டாயமாக வன்கொடுமை செய்த சிவசங்கர் பாபா - 2வது குற்றப்பத்திரிகை தயார்
சிவசங்கர் பாபா பள்ளி மாணவிகளை வலுக்கட்டாயமாக அழைத்து வன்கொடுமை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சிவசங்கர் பாபாவுக்கு எதிராக 2வது குற்றப்பத்திரிகை தயாராகிவிட்டதாகவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை: சுசீல் ஹரி பள்ளி மாணவிகளை வலுக்கட்டாயமாக அழைத்து சிவசங்கர் பாபா பாலியல் வன்கொடுமை செய்ததாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா மீது சில நாட்களில் இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் இயங்கி வரும் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவசங்கர் பாபா தலைமறைவானார். சிவசங்கர்பாபா வெளிநாடு தப்பிக்காமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

சிவசங்கர் பாபா மீது 3 வழக்குகள்
டெல்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபாவை கடந்த ஜூன் 16ஆம் தேதி சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சிவசங்கர் பாபா. தற்போதுவரை சிவசங்கர் பாபா மீது 3 வழக்குகள் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சொகுசு அறையில் சோதனை
சிவசங்கர் பாபாவின் மின்னஞ்சல் கணக்கில் மாணவிகளுக்கு அனுப்பிய ஆபாச பதிவுகள் சிக்கி உள்ளது என்றும், அதில் மாணவி ஒருவருடன் வீடியோ காலில் பேசியதற்கான ஆதாரம் சிக்கி உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து சிவசங்கர் பாபா பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த இமெயில் கணக்கை சிபிசிஐடி காவல்துறையினர் முடக்கி உள்ளனர். அவர் பயன்படுத்தி வந்த சொகுசு அறையை சோதனை செய்து லேப்டாப், ஹார்ட் டிஸ்க்குகளை காவல்துறையினர் எடுத்துச்சென்றுள்ளனர்.

ஜாமீன் கேட்ட சிவசங்கர் பாபா
கைதுக்குப் பிறகு சிவசங்கர் பாபாவுக்கு இருமுறை நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதனை சுட்டிக் காட்டி அவருக்கு ஜாமீன் கோரி வருகிறது சிவசங்கர் பாபா தரப்பு. இருப்பினும் சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது.

போக்சோ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை
இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி சிபிசிஐடி போலீசார் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். 40 சாட்சியங்களின் அடிப்படையில் இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியரான பாரதி சீனிவாசன், நடன ஆசிரியர் சுஷ்மிதா, தீபா ஆகிய 3 பேர் பெயரும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது. தாக்கல் செய்துள்ளனர்.

மாணவிகள் வன்கொடுமை
இதனிடையே பள்ளி மாணவிகளை வலுக்கட்டாயமாக அழைத்து சிவசங்கர் பாபா வன்கொடுமை செய்ததாக சிபிசிஐடி நடத்திய விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. சுஷில் ஹரி பள்ளியில் 2011, 2012 ,2013 படித்த மாணவர்களை வலுக்கட்டாயமாக வன்கொடுமை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சிபிசிஐடி விறுவிறுப்பு
சிவசங்கர் பாபாவுக்கு எதிராக இரண்டாவது குற்றப்பத்திரிக்கை தயாராகிவிட்டதாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா மீது சில நாட்களில் இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. மூன்றாவது போக்சோ வழக்கில் குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications