"பெண்கள் என்கிட்ட என்ன சொல்றாங்க தெரியுமா..? ஒரே கையெழுத்துல எத்தன கோடி..” - ஸ்டாலின் பேச்சு!
சென்னை: தாம்பரம் திமுக எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜாவின் மகன் திருமண விழாவிற்கு தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
திருவான்மியூரில் நடந்த எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.
இந்த விழாவில் பேசிய ஸ்டாலின், ஒராண்டு ஆட்சியில் மிகப்பெரிய சாதனை மகளிருக்கு அளிக்கப்பட்டுள்ள பேருந்து கட்டண சலுகை எனப் பேசினார்.
ஸ்டாலின் குடும்பத்திலிருந்து இன்னொரு அரசியல்வாதி? திமுகவில் இப்போ இதுதான் டிரெண்டிங் டாபிக்!
எஸ்.ஆர்.ராஜா
தாம்பரம் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் எஸ்.ஆர்.ராஜா. இவர் மூன்றாவது முறையாக அதே தொகுதியிலிருந்து எம்.எல்.ஏவாக இருக்கிறார். அதற்கு முன்பு தாம்பரம் நகர் மன்றத் தலைவராக 10 ஆண்டுகள் இருந்திருக்கிறார்.
அவரது மகன் நெல்சன் மண்டேலாவின் திருமணம் இன்று சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்திப் பேசினார்.
புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின்
இந்த விழாவில் தி.மு.க எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜாவை பாராட்டித் தள்ளினார் முதல்வர் ஸ்டாலின். வட்டச் செயலாளராக, இளைஞரணி அமைப்பாளராக, நகர செயலாளராக என பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றியர் எஸ்.ராஜா என முதல்வர் குறிப்பிட்டார்.
எந்தப் பணியில் அவர் ஈடுபட்டாலும் வெற்றி காணக்கூடியவர் எஸ்.ஆர்.ராஜா. என்னிடத்திலே கூட. எதில் வெற்றி காண முடியுமோ அதை உணர்ந்து அதை அழுத்தந் திருத்தமாகப் பேசுவார். அவர் ஈடுபட்டுள்ள சிமெண்ட், இரும்புக்கடை, நகைக்கடை என அவர் தொட்டதெல்லாம் துலங்கும் எனப் பேசினார்.
ஓராண்டில் சாதனை
மேலும் பேசிய ஸ்டாலின், தேர்தல் அறிக்கையை புத்தகமாக வெளியிட்டோம். ஒராண்டில் செய்து முடித்ததை புத்தமாக வெளியிடும் அளவுக்கு பல காரியங்களை இந்த ஆட்சியில் செய்து முடித்துள்ளோம். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட ஓராண்டு காலத்திலேயே 10 ஆண்டுகளில் செய்யக்கூடிய அளவை விட அதிகமாக சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறோம்.
எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் நான் பேசும்போது என்னுடைய ஆட்சி என்று சொல்லமாட்டேன். நம்முடைய ஆட்சி என்றுதான் சொல்வேன். வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்து நன்மை செய்யும் ஆட்சியாக தி.மு.க ஆட்சி.
Recommended Video
பெண்களுக்கு சேமிப்பு
ஒராண்டில் மிகப்பெரிய சாதனை மகளிருக்கு அளிக்கப்பட்டுள்ள பேருந்து கட்டண சலுகை. இதனால் மிச்சமான பணத்தை சேமிக்கும் பழக்கத்திற்கு பெண்கள் வந்துள்ளார்கள். இலவச பேருந்து திட்டத்தால் பெண்களுக்கு சராசரியாக மாதந்தோறும் ரூ.600 முதல் ரூ.1,200 வரை மிச்சமாகிறது. நான் போட்ட ஒரே கையெழுத்தால் பல லட்சக்கணக்கான பெண்கள் பயன்பெற்றுள்ளார்கள். ஒராண்டில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் ஒளியேற்றியிருக்கிறது தி.மு.க அரசு எனத் தெரிவித்தார்.