நடப்பது நல்லதாக தெரியவில்லை... பார்த்துகங்க... காங்.தலைவர்களிடம் கொந்தளித்த திமுக
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல்பாடுகள் நல்லதாக தெரியவில்லை என்றும், இதனால் ஏற்படும் பாதிப்பு காங்கிரசுக்கு தான் பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் கொந்தளித்துள்ளது திமுக.
டெல்லியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியுள்ளார்.
அதில், தங்களுக்கு காங்கிரசுடன் இணைந்து தான் அரசியல் செய்ய வேண்டும் என்ற நிலையில்லை என்றும், பல ஆஃபர்கள் இருந்தும் அதை எதையும் விரும்பாமல் உங்களை எங்களுடன் வைத்திருக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
கடும் அதிருப்தியில் திமுக... சோனியா காந்தியுடன் கே.எஸ். அழகிரி திடீர் சந்திப்பு
பகை
திமுக காங்கிரஸ் கூட்டணியில் கே.எஸ்.அழகிரி விடுத்த அறிக்கை விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இருகட்சிகளிடம் இருந்த உறவு இப்போது முன்பு போல் இல்லை என்பது தெள்ளத்தெளிவாக உணர்த்தி வருகிறது. அழகிரி திமுகவை பழித்து அறிக்கை விட்டபோது அந்தமானில் இருந்த ஸ்டாலின் அங்கிருந்தே இது தொடர்பாக டி.ஆர்.பாலு, துரைமுருகன் போன்றோரிடம் பேசியிருக்கிறார்.
பொறுமை
இதையடுத்து கே.எஸ்.அழகிரிக்கு வழக்கமான தனது பாவனையில் நக்கல், நையாண்டியாக ஒரு பதிலை கூறவா என துரைமுருகன் ஸ்டாலினிடம் கேட்டிருக்கிறார். ஆனால், டி.ஆர்.பாலு தான் முதலில் இதை அக்கட்சியின் தேசியத் தலைமைக்கு கூறுவோம், நிச்சயம் அவர்கள் கண்டிப்பார்கள். ஒருவேளை இல்லை என்றால் பிறகு நாம் இறங்கலாம் எனக் கூறினாராம்.
சமாதானம்
இதன் பிறகே டெல்லியில் காங்கிரஸ் தரப்பிடம் தனது கோபத்தை முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் மூலம் வெளிப்படுத்தி உள்ளார் ஸ்டாலின். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட சீட் கேட்கத்தெரிந்தவர்களுக்கு, எதுவரை வார்டு இருக்கிறது என்று கூடத் தெரியவில்லை, இவர்கள் தான் நிர்வாகிகளாக இருந்துகொண்டு திமுக கொடுக்கவில்லை என குறைகூறுகிறார்கள் என விளக்கியுள்ளார்.
புட்டு புட்டு
மேலும், தமிழகத்தில் காங்கிரஸுக்கு உள்ள வாக்கு வங்கி, நிர்வாகிகள் செயல்பாடுகள் பற்றியெல்லாம் விலாவாரியாக புட்டு புட்டு வைத்திருக்கிறார் அவர். இதைக்கேட்டு ஆடிப்போன கே.சி.வேணுகோபால் இது பற்றி தாம் பார்த்துக்கொள்வதாகவும், விசாரிப்பதாகவும் உறுதியளித்தாராம்.