எதிர்காலத்தை பாழாக்காதீங்க.. மொத்தமா திமுகவுக்கு வாங்க.. அதிமுகவினரை அன்பாய் அழைத்த ஆர்எஸ் பாரதி
சென்னை: ‛‛திராவிட இயக்கத்தின் தாய்கழகம் திமுக தான். இதனால் அதிமுகவினர் அனைவரும் அதிமுகவினர் அனைவரும் எங்களோடு வர வேண்டும்'' என திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி கூறினார்.
தமிழகத்தில் திமுக, அதிமுக இடையே வார்த்தை போர் நீடித்து வருகிறது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து திமுகவை விமர்சனம் செய்து வருகிறார்.
இந்நிலையில் தான் கும்மிடிபூண்டியில் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், ‛‛திமுகவின் 10 எம்எல்ஏக்கள் எங்களுடன் பேசி கொண்டுள்ளனர்'' என தெரிவித்தார். மேலும், அரசின் நலத்திட்டங்களை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என குற்றம்சாட்டி இருந்தார்.

ஆர்எஸ் பாரதி பதிலடி
எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பேச்சுக்கு திமுகவின் ஆர்எஸ் பாரதி பதிலடி கொடுத்துள்ளார். மேலும் அதிமுகவினர் திமுகவுடன் இணைய வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார். இதுதொடர்பாக சென்னையில் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

30 எம்எல்ஏக்கள், 2 எம்பிக்கள்
அதிமுகவின் 30 எம்எல்ஏக்கள், இரு எம்பிக்கள் எங்களுடன் பேசுகிறார்கள். 30 அதிமுக மாவட்டச் செயலாளர்களும் எங்களுடன் பேசி வருகிறார்கள். திமுக எம்எல்ஏக்களின் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட தயாரா?. எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டால் அதிமுக எம்எல்ஏக்களின் பட்டியலை நாங்கள் வெளியிடுகிறோம்.

அதிமுகவினர் திமுகவில் இணையனும்
அதிமுகவில் இருந்து பலபேர் எங்களுடன் வந்துள்ளனர்; இதனை யாரும் மறுக்க முடியாது. தற்போது பலபேர் பல்வேறு பதவிகள் உள்ளனர். அதிமுகவில் உள்ளவர்கள் அனைவரும் திமுகவுடன் இணைய வேண்டும். ஏனென்றால் திமுக தான் உண்மையான திராவிடர் இயக்கம். இதுதான் திராவிடர் இயக்கத்தின் தாய் கழகம்.

எதிர்காலத்தை பாழாக்காமல்...
தற்போது பெரியார் இல்லை. அண்ணா இல்லை. கருணாநிதி இல்லை. எம்ஜிஆர் இல்லை. ஜெயலலிதா இல்லை. இதனால் திராவிடர் இயக்கத்தை காக்கும் தலைவர் ஸ்டாலின் தான் என்று காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலானவர்கள் ஏற்று கொண்டுள்ளனர். இதனால் அதிமுகவில் உள்ள நண்பர்கள் எதிர்காலத்தை பாழாக்காமல் திமுகவுடன் ஒன்றிணைய வர வேண்டும்.

உதயநிதி தொடங்கி வைப்பதில் தவறில்லை
எந்த பதவியில் இல்லாத சசிகலாவை சட்டமன்றத்தில் உட்கார வைத்த கட்சி தான் அதிமுக, ஜெயலலிதா. எம்எல்ஏவாக இல்லாத சசிகலாவை அரசு நிகழ்ச்சி மட்டுமின்றி முதல் அமைச்சர் போன்று நடத்தியவர் தான் ஜெயலலிதா. ஏன் எடப்பாடி பழனிச்சாமி கூட அவரது காலில் விழுந்து தான் வந்துள்ளார். உதயநிதி ஒரு சட்டமன்ற உறுப்பினர். இவர் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் எந்த குற்றமும் இல்லை. தவறும் இல்லை'' என்றார்.












Click it and Unblock the Notifications