திமுக வடசென்னை மாவட்ட முன்னாள் செயலாளர் எல். பலராமன் காலமானார்- ஸ்டாலின் இரங்கல்
சென்னை: திமுகவின் வடசென்னை மாவட்ட முன்னாள் செயலாளர் எல். பலராமன் உடல்நலக் குறைவால் காலமானார். அவர் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திமுகவின் மாவட்ட நிர்வாகம், வடசென்னை மற்றும் தென் சென்னையாக செயல்பட்டது. அப்போது வடசென்னை திமுக மாவட்ட செயலாளராக இருந்தவர் எல். பலராமன்.
திமுகவில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்ட நிலையில் பிளவை சந்தித்தது. அப்போது வடசென்னையில் திமுகவை கட்டிக் காத்தவர்களில் முக்கியமானவர் எல். பலராமன். அவர் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக லோக்சபா எம்.பி. தயாநிதி மாறன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
உலகின் கவனத்தைத் திசைதிருப்ப சீனா தாக்குதல்- 22 ஆண்டுகள் பணிபுரிந்த வீரர் பழனி- வைகோ, கமல் இரங்கல்
துறைமுகம் டூ வடசென்னை
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்: வடசென்னை மாவட்டக் கழக முன்னாள் செயலாளரும், தற்போது கழகத்தின் தணிக்கைக்குழு உறுப்பினருமான திரு. எல்.பலராமன் அவர்கள் கோவிட்-19 நோய்த் தொற்றால், இன்று காலை மறைவெய்தினார் என்ற அதிர்ச்சிச் செய்தியால் நான் மீளாத் துயரத்திற்கும், சோகத்திற்கும் உள்ளாகியிருக்கிறேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தில் சென்னை மாநகரின் முன்னணிக் கள வீரர்களில் ஒருவராகவும், துறைமுகம் பகுதிச் செயலாளராகவும் அவர் ஆற்றிய பணிகளை யாரும் மறந்திட முடியாது.
திமுகவின் போராளி
அவர் கழகத்தின் ஒரு கடின உழைப்பாளி. கட்சிப் பணியோ, தேர்தல் பணியோ, மக்கள் பணியோ - அனைத்திலும் விறுவிறுப்புடன் களத்திற்கு வரும் அவர், போராட்டம் என்றால் போராளியாகவே மாறி களத்தில் நிற்கும் தைரியசாலி. கழகத் தலைவராக இருந்து நம்மையெல்லாம் வளர்த்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும், கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் அவர்களும் துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெறுவதற்கு பம்பரம் போல் சுழன்று பணியாற்றி - ஒரு இயக்கத்தின் தலைவரும், பொதுச்செயலாளரும் தேர்தலில் வெற்றி பெறப் பணியாற்றும் பெருமையைப் பெற்ற கழக முன்னணி நிர்வாகியாக விளங்கியவர்.
தியாகங்கள் மறையாது
முத்தமிழறிஞர் கலைஞர் மீது மட்டுமின்றி, என் மீதும் பாசத்தை அருவி போல் கொட்டிய அவரை - ஏன், ஒட்டுமொத்தமாக எங்கள் குடும்பத்தோடும்- கழகக் குடும்பங்களில் உள்ள அனைவரோடும் அன்பாகவும், பாசமாகவும் பழகக் கூடியவரை இன்றைக்கு கழகம் இழந்து நிற்கிறது. அவர் மறைந்தாலும்- அவரது பணிகளும், தியாகங்களும் மறையாது. திரு. எல்.பலராமன் அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும், அனைத்து கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
தயாநிதி மாறன் இரங்கல்
தயாநிதி மாறனின் இரங்கல்: முன்னாள் வடசென்னை மாவட்டக் கழகசெயலாளரும், தணிக்கை குழு உறுப்பினருமான அருமை அண்ணன் எல்.பலராமன் அவர்களின் மறைவு என்பது கழகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.... இவ்வாறு தயாநிதி மாறன் கூறியுள்ளார்.
எல். பலராமன் மறைவையொட்டி, சென்னை கிழக்கு மாவட்டத்தில் 3 நாட்களுக்கு திமுக சார்பில் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உதயநிதி இரங்கல்
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்: பலராமன் மாமா ஒருங்கிணைந்த வடசென்னையின் மாவட்டச் செயலாளர். கோபாலபுரத்தில் எதிர்ப்படுவார். ‘யோவ் வாய்யா, எப்படிய்யா இருக்க?' என்பார். ‘நல்லாயிருக்கேன் மாமா' என்பேன். சிரித்தபடி முதுகில் தட்டிக்கொடுத்துவிட்டுச் செல்வார். அதில் ஒட்டுமொத்த வடசென்னையின் அன்பும், உரிமையும் வெளிப்படும். இனி உங்களைப் பார்க்கவே முடியாது என்பதை மனம் நம்ப மறுக்கிறது மாமா! உங்களின் கழகப் பணியையும் என் மீதான அன்பையும் எப்போதும் மனதில் பத்திரப்படுத்தி வைத்திருப்பேன். உங்கள் குடும்பத்துக்கு இரங்கல் சொல்வது என்பது எனக்கு நானே ஆறுதல் தேடிக்கொள்வதுபோல்தான். போய் வாருங்கள் மாமா. இவ்வாறு உதயநிதி கூறியுள்ளார்.