சாமி சிலை கடத்திய தீனதயாளனை முதல்முறையாக கைது செய்தேன்! என் மீதே புகாரா? பொன் மாணிக்கவேல் ஆவேசம்
சென்னை: என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறு என முன்னாள் ஐிஜி பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
மயிலாப்பூரில் பொன் மாணிக்கவேல் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் 1958 லிருந்து இன்னொரு 58 வருடங்களை கூட்டுங்கள். அந்த 58 வருஷம் கழித்து இந்திய போலீஸோ சிபிஐயோ சிபிசிஐடியோ யாருமே சிலைக் கடத்தல் தீனதயாளனை கைது செய்யவில்லை. முதல் முறையாக நான்தான் கைது செய்தேன்.
என்னை பார்த்து குற்றவாளியை விட்டுவிட்டீர்கள் என சொன்னால் நியாயமா? 58 ஆண்டுகள் பிடிக்காமல் இருந்தவரை நான் பிடித்தேன். 1983 ஆம் ஆண்டு முதல் எத்தனை அதிகாரிகள் இருந்தார்கள். இவர்கள் எல்லாம் எங்கே போனார்கள். இவர்கள் பிடிக்காமல் இருந்த குற்றவாளியை நான் பிடித்தேன். அதுவும் 833 தெய்வ விக்கிரகங்களை வீட்டிலிருந்து மீட்டேன். அவரது வீட்டையே நிர்மூலமாக்கினேன். வியாபாரத்தையும் குளோஸ் செய்துவிட்டேன்.
2012 இலிருந்து ஒரு சிலை கூட வெளிநாட்டுக்கு போக முடியாதபடி நான் அத்தனையையும் செய்தேன். 2016 இல் தீனதயாளனை நான் பிடித்தேன். அப்போதெல்லாம் உயர்நீதிமன்றம் எனக்கு அதிகாரம் கொடுக்கவில்லை. நான் தனிப்பட்ட முறையில் ஒரு டிஐஜி, 7 போலீஸை வைத்து பிடித்தேன். அந்த தீனதயாளனின் வீட்டில் 30 நாட்கள் நான் இருந்தேன். அவரை கைது செய்து 90 நாட்கள் சிறையில் அடைத்தேன்.

இரண்டே முக்கால் ஆண்டுகள்
நான் ஓய்வு பெற்று வெளியே வந்ததும் இரண்டே முக்கால் ஆண்டுகளாக என்னை போன்று பெரிய அதிகாரிகள் பணியாற்றி வந்த போதிலும் அவர்கள் அந்த வழக்கு குறித்து குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்யவில்லை. இந்த அதிகாரிகள் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் வரி பணத்தில் எதற்காக சம்பளம் வாங்குகிறார்கள். இரண்டை வருஷம் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் இருப்பதால் குற்றவாளிகளின் வீட்டிலேயே திருடப்பட்ட பொருட்கள் இன்னமும் இருக்கு.

சிலை கடத்தல்
அர்த்தநாரீஷ்வரர் சிலை கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் தீனதயாளன் அப்ரூவர் ஆகியுள்ளார். அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அப்ரூவர் ஆனவரை விடுதலை செய்ய சட்டமே சொல்கிறது. அப்ரூவர் எடுப்பது சாதாரண விஷயம் இல்லை. கடந்த 2006 முதல் 2016 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகளில் இருந்த இரு கட்சிகளின் ஆட்சியின் போது 17,800 கொலைகள் தமிழகத்தில் நடந்துள்ளனர். அந்த உடல்களை படுக்க போட்டால் பாரீஸில் இருந்து செங்கல்பட்டு வரை நீண்டு கிடக்கும். அவ்வளவு கொலை நடந்துள்ளது. ஒவ்வொரு கொலை வழக்குகளையும் ஒரு ஆய்வாளர் விசாரிப்பார். அந்த கொலைகளுக்கு ஒரு அப்ரூவர் கூட இல்லை. ஆனால் நாங்கள் 31 வழக்குகளுக்கு 9 அப்ரூவர்களை எடுத்துள்ளோம். outstanding capability இருக்கும் போலீஸ் குழுவால் மட்டுமே எடுக்க முடியும் என்றார்.

முக்கிய கோயில்கள்
தமிழகத்தில் பல முக்கிய கோயில்களில் இருக்கும் பழம்பெரும் விலைமதிப்புள்ள சாமி சிலைகள் மாயமானதாக எழுந்த புகாரின் பேரில் முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் விசாரணை நடத்தினார். அப்போது அதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. பல கோடி மதிப்பிலான சாமி சிலைகளை சர்வதேச கடத்தல்காரர்களுடன் இணைந்து கடத்தியதாக திருவள்ளூர் மாவட்ட முன்னாள் டிஎஸ்பி காதர் பாஷா மீது புகார் எழுந்தது.

சஸ்பெண்ட்
இந்த விவகாரத்தில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். இந்த நிலையில் முக்கிய குற்றவாளியைத் தப்பிக்க வைக்கத்தான் தன் மீது பொய்யான வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காதர் பாஷா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பழவலூர் சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி தீனதயாளனை தப்பிக்க வைக்க அப்போதைய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் அவருடன் கூட்டு சேர்ந்து என்னை பழிவாங்கும் நோக்கில் பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாக காதர் பாஷா தெரிவித்திருந்தார்.

சிபிசிஐடி
மேலும் இந்த விவகாரத்தில் சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் காதர் பாஷா மனுதாக்கல் செய்திருந்தார். இதனிடையே இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பொன் மாணிக்கவேல் மீதான புகாரை அறிக்கையாக தாக்கல் செய்ய சிபிஐக்கு கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது. இந்த சிபிஐ விசாரணை உத்தரவுக்குத் தடை கோரி பொன் மாணிக்கவேல் மேல்முறையீடு செய்துள்ளார்.

13 சிலைகள் திருட்டு
இந்த நிலையில் சிபிஐ, பொன் மாணிக்கவேல் மீது அதிரடியாக வழக்குப் பதிவு செய்துள்ளது. பழவலூரில் 13 சிலைகள் திருடப்பட்ட வழக்கில் பொன் மாணிக்கவேல் நடத்திய விசாரணையில் முறைகேடு நடந்துள்ளது உறுதியானதாகவும் இதன் காரணமாக அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications